பெங்களூரில் இருந்து சென்னைக்கு சென்றபோது குடியிருப்பு பகுதியில் பாய்ந்த ஆம்னி பஸ் மாணவர்கள் உள்பட 33 பயணிகள் தப்பினர்: வாலாஜா அருகே இன்று காலை விபத்து

வாலாஜா: வாலாஜா அருகே இன்று காலை குடியிருப்புக்குள் ஆம்னி பஸ் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் உள்பட 33 பேர் காயமின்றி தப்பினர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு நள்ளிரவில் தனியார் அமைப்பு சார்பில் ஆம்னி பஸ் ஒன்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 31 பேருடன் புறப்பட்டது. இவர்கள் சென்னையை சுற்றி பார்க்க வந்துள்ளனர். ஆம்னி பஸ்சை கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனேகோட்டையை சேர்ந்த டிரைவர் கணேசன்(31) என்பவர் ஓட்டினார். கிளீனராக நந்தகுமார்(20) என்பவரும் உடன் வந்தார்.

ராணிப்பேட்ைட மாவட்டம் வாலாஜா அடுத்த கிருஷ்ணாவரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 6 மணியளவில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ், வலதுபுற சாலை தடுப்புகளை உடைத்துக்கொண்டு எதிர் சாலையின் குறுக்காக பாய்ந்தது. அப்போது அங்கு குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் ஆம்னி பஸ்சின் முன்புறம் சேதமானது. பஸ்சில் வந்த மாணவ, மாணவிகள் உள்பட 33 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் முன்னதாக இவர்கள் சென்ற ஆம்னி பஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு பஸ், பயணிகளுடன் சில கிலோ மீட்டர் தூரத்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளை அந்த பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான பஸ்சை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories: