சென்னை: புதிய அரசின் முதல் அமைச்சரவையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகப் பிரதிநிதி இடம்பெறாதது கவலையளிக்கிறது என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் தெரிவித்துள்ளார். மேலும் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய அரசின் பதவியேற்பு விழாவின்போது, இந்த அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்கிற உறுதியைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த உறுதியுடன், அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மாநில உரிமையைக் காக்கும் அரசாகவும் செயல்பட வாழ்த்துகிறேன்.
இன்று நடைபெற்ற புதிய அரசு பதவியேற்பு விழாவின் தொடக்க நிகழ்வுகள், காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அரசு நடைமுறைகளைச் சிதைக்கும் வகையில் அமைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடம் கொடுக்கப்பட்டிருப்பது நீண்டகால மரபை மீறிய செயலாகும். தமிழகத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு விழுமியமாகவும் திகழும் தமிழ்த்தாய் வாழ்த்தை விழாவின் தொடக்கத்திலேயே பாடிக் கௌரவிப்பதே முறையானது. இந்த முன்னுரிமை மாற்றமானது தமிழ்ப்பற்றுடைய மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தமிழ்நாட்டின் நீண்டகால மரபைப் புதிய அரசும் பின்பற்றி அதனைப் பாதுகாக்கும் வகையில் சட்டமன்றக் கூட்டம் உள்ளிட்ட அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அமைச்சரவை உருவாக்கத்தில் அனைத்துச் சமூகத்தினருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அதில் ஒரு மிகப்பெரிய இடைவெளி இருப்பதை உணர முடிகிறது. குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி கூட இந்த அரசின் முதல் அமைச்சரவையில் இடம்பெறாதது மிகுந்த கவலைக்குரியது. ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலும் அதிகார மையத்தில் ஒலிக்க வேண்டியது அவசியமாகும். இனி அது சரிசெய்யப்படுவதாக இருந்தாலும், புதிய அரசில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் அமைச்சரவைப் பிரதிநிதித்துவத்தை அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், முதல் அமைச்சரவை பதவி ஏற்பில் அச்சமூகத்திற்குப் பிரதிநிதித்துவம் இல்லாதது கவலையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.
தற்போது இந்தியா முழுவதும் முஸ்லிம் சமூகம் பல்வேறு அரசியல் காரணங்களால் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழல் நிலவுகிறது. இத்தகைய காலகட்டத்தில், சமூக நீதியைப் போற்றும் தமிழகத்திலும் அதே போன்றதொரு புறக்கணிப்பு தொடர்வது ஆரோக்கியமானதல்ல. சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், அவர்களின் அரசியல் பங்கேற்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமை இந்த அரசுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, வரும் காலத்தில் அதனைச் சரி செய்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
