×

கொச்சியில் காதலன் கண்ணெதிரே கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: 2 ரவுடிகள் கைது ஒருவருக்கு வலை

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் காதலன் முன்னிலையில் இளம்பெண் கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.கேரளம் மாநிலம் கொச்சியை சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான இளம்பெண் ஒருவர் அங்குள்ள நிறுவனத்தில் மனிதவளத் துறை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு தனது காதலனுடன் எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள ஆள் நடமாட்டமில்லாத ஒரு கட்டிடத்தின் 10வது மாடியில் பேசிக் கொண்டு இருந்தார். இதை கவனித்த அந்த பகுதியை சேர்ந்த 3 ரவுடிகள் அங்கு சென்று தங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி இளம்பெண்ணை மிரட்டி உள்ளனர். ஆனால் அதற்கு மறுத்து இருக்கிறார். உடனே அவர்களுடன் இளம்பெண்ணின் காதலன் தகராறு செய்தார். அவரை தாக்கிய ரவுடிகள் கத்தியைக் காட்டி மிரட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து இளம்பெண் 3 பேரையும் தள்ளிவிட்டு 10வது மாடியில் இருந்து கீழே இறங்கி ஓடினார். இதுகுறித்து உடனடியாக அவர் அவசர போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே ரவுடிகள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். கொச்சி மத்திய போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதலில் தன்னை ரவுடிகள் பலாத்காரம் செய்த விவரத்தை இளம்பெண் போலீசிடம் கூறவில்லை. ரவுடிகள் கத்தியை காட்டி மிரட்டி தன்னை தாக்கினர் என்று மட்டுமே கூறினார். போலீசாரின் தீவிர விசாரணையில் நீண்ட நேரம் கழித்தே தன்னை ரவுடிகள் பலாத்காரம் செய்த விவரத்தை தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் திருவனந்தபுரம் இடவா பகுதியை சேர்ந்த முகம்மது டானிஷ் (28), கொல்லம் பரவூர் பகுதியை சேர்ந்த ராகுல் (39) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய எர்ணாகுளம் அரூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் 3 பேர் மீதும் ஏராளமான கிரிமினல் வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கேரள மாநிலம் கொச்சியில் காதலன் முன்னிலையில் கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kochi ,Thiruvananthapuram ,Kochi, Kerala ,Kochi, Kerala… ,
× RELATED மேற்குவங்க மாநில முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!