×

கேரள முதல்வர் தேர்வு காங்கிரசில் இழுபறி நீடிப்பு: சதீசனுக்கு ஆதரவு தெரிவித்து ஆதரவாளர்கள் பேரணி

 

திருவனந்தபுரம்: கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளில் 102 தொகுதிகளில் வெற்றி பெற்ற பின்னரும் காங்கிரசில் இதுவரை முதல்வர் யார் என்பதை தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்கு கே.சி. வேணுகோபால் எம்.பி., சதீசன் மற்றும் ரமேஷ் சென்னித்தலாவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

முதல்வரை தீர்மானிக்க காங்கிரஸ் மேலிடக் குழு கடந்த இரு தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் வந்தது. இக்குழு காங்கிரஸ் எம்எல்ஏக்கள், சதீசன், வேணுகோபால், ரமேஷ் சென்னித்தலா மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது. இதன் பின்னர் காங்கிரஸ் மேலிடத்திடம் விவரங்களை தெரிவிப்பதற்காக இக்குழு டெல்லி புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே வேணுகோபால், சதீசன் மற்றும் ரமேஷ் சென்னித்தலாவின் ஆதரவாளர்கள் தங்களது தலைவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் பேரணி நடத்த தொடங்கினர். இதைத் தொடர்ந்து இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் 3 தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதையும் மீறி நேற்று திருவனந்தபுரம், கோட்டயம், மலப்புரம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் சதீசனின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்.

இதில் கலந்து கொண்டவர்கள் சதீசனின் படங்களை ஏந்தியபடி, தங்களது தலைவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். கோட்டயத்தில் ஒரு தொண்டர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே சதீசன் மற்றும் ரமேஷ் சென்னித்தலாவை உடனடியாக டெல்லிக்கு வரும்படி காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். முதல்வர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்று இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags : Kerala ,Chief Minister ,Congress ,Satheesan ,Thiruvananthapuram ,K.C. Venugopal ,Ramesh Chennithala ,
× RELATED ஆம்ஆத்மி அமைச்சர் வீட்டில் ஈடி சோதனை;...