பாகிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காத்து கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது: ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் உறுதி

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஓராண்டு நிறைவையொட்டி ஒன்றிய வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், “பஹல்காம் தீவிரவாத தாக்குதலை உலகமே பார்த்தது. இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்த பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி தந்தது.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது நீண்ட காலமாக பாகிஸ்தானின் அரச கொள்கையின் ஒரு கருவியாக இருப்பதை உலகமே அறியும். இந்த பயங்கரவாதத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும், குடிமக்களை பாதுகாக்கவும் இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த இந்தியா தொடர்ந்து பாடுபடும்” என்றார். இதுகுறித்து ஒன்றிய வௌியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறுகையில், “பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இருந்து தன்னை தற்காத்து கொள்ளும் உறுதியை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா நிரூபித்தது. அதன் தீர்க்கமான நடவடிக்கைகளால் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்திய பொறுப்புக்கூறலை உறுதி செய்தது. அத்துடன், அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எதிரான இதுபோன்ற அச்சுறுத்தல்கள் திறம்பட எதிர்கொள்ளப்படும் என்பதை அடிக்கோடிட்டு காட்டியது” என்று தெரிவித்தார்.

சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தம் நீடிக்கும்
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நம்பகமான மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கையை எடுக்கும் வரை, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கும் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்தார்.

Related Stories: