சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை மே.வங்கத்தில் மாபியா கலாச்சாரம்: திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜ குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொல்லப்பட்ட நிலையில் தேர்தலுக்கு பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது மாபியா கலாச்சாரத்தை தொடங்கியுள்ளதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜவுக்கு தாவிய சுவேந்து அதிகாரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார். சமீபத்திய தேர்தலில் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தோல்வியடைய செய்தார். மேலும் நந்திகிராம் தொகுதியில் 3வது முறையாக வெற்றி வாகை சூடியுள்ளார்.

இந்நிலையில், பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து தேர்வு செய்யப்பட்டு முதல்வராக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இந்த சூழலில்தான் மத்தியம்கிராம் பகுதியில் சுவேந்து அதிகாரியின் நிழலாக இருந்த அவரது உதவியாளர் சந்திரநாத் ரத், காரில் சென்றபோது கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து தேர்தலுக்கு பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது மாபியா கலாச்சாரத்தை தொடங்கியுள்ளதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து பாஜவின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறுகையில்,‘‘கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை நிறுவனமயமாக்கப்பட்டுவிட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பின்னடைவுகள் ஏற்படும் போதெல்லாம் பாஜ தொண்டர்களும் தலைவர்களும் குறிவைக்கப்படுகிறார்கள். சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் கொல்லப்பட்டது கடந்த 15 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட பெரும் காட்டுமிராண்டி ஆட்சியின் நேரடி விளைவாகும். 2021ம் ஆண்டு அல்லது இப்போதும் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை நிறுவனமயமாக்கப்பட்டுள்ள விதம் இதுதான். இது நேரடியாக குறிவைத்து நடத்தப்பட்ட கொலை சம்பவமாகும்” என்றார்.

பாஜவின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் சமிக் பட்டார்ச்சார்யா, ‘‘இது ஒரு திட்டமிட்ட அரசியல் கொலை. மாநிலத்தில் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்காகவே இந்த கொலைத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது” என்றார். இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மிட்னாப்பூர் மாவட்டத்தில் மத்தியம்கிராம் பகுதியில் பாஜ ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட பாஜ தொண்டர்கள், ஆதரவாளர்கள் முக்கிய சாலைகளை மறித்து டயர்களை எரித்து முழக்கமிட்டனர். மேற்கு வங்கத்தில் தனது முதல் அரசை அமைக்கத் தயாராகி வரும் பாஜவுக்கு இந்த கொலை ஒரு சவாலாகவும், அரசியல் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது
பாஜ தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘‘ காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. நான் டிஜிபியுடன் பேசினேன். அவர்களுக்கு முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. சிலர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை காவல்துறையினரால் நிச்சயம் கைது செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சிஐடி, தடயவியல் துறை மற்றும் சிறப்பு புலனாய்வு குழு ஆகியவை களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. காவல்துறை சரியான திசையிலேயே தனது விசாரணையை முன்னெடுத்து செல்கின்றது” என்றார்.

Related Stories: