கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று சந்தித்து பேசினார். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும், இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவதாகவும் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதாகவும் மம்தா பானர்ஜி உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள காளிகாட் இல்லத்தில் மம்தா பானர்ஜியை சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில், ‘‘உபியில் ஏற்கனவே நடந்தது இப்போது மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் மிரட்டப்பட்டனர். எதிர்க்கட்சிகளின் தோல்வியை உறுதி செய்ய மத்திய படைகள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் கொள்ளையடிக்கப்பட்டது. பாஜ, தேர்தல் ஆணையம் மற்றும் மாபியா சக்திகள் இணைந்து இந்தத் தேர்தலை நடத்தின’’ என தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக புகைப்படங்களையும் தரவுகளையும் காண்பித்து கூறினார்.
