பெரம்பலூர்,மே 7: பெரம்பலூரில் ஸ்கூட்டர் மீது பைக் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற அரசு சித்த மருத்துவர் பலியானார். பெரம்பலூர் நகராட்சி, மதன கோபாலபுரத்தில் வசித்து வந்தவர் குணசேகர் (61). இவரது சொந்த ஊர் எசனை. ஓய்வு பெற்ற அரசு சித்த மருத்துவரான குணசேகர் நேற்று காலை தனது ஸ்கூட்டரில் வீட்டிலிருந்து, சொந்தவேலை காரணமாக வெளியே சென்றார். அவர் காமராஜர் வளைவிற்கு வருவதற்காக மதரஸா ரோட்டில் இருந்து வலதுபுறம் திரும்பும்போது, மேற்கில் இருந்து கிழக்குநோக்கி, பெரம்பலூர் தாலுகா, சோமுண்டாபுதூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோபி மகன் பிரதீப்ராஜ்(19) என்பவர் ஓட்டிவந்த பைக் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த குணசேகருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிரதீப் ராஜ்கும் காயம் ஏற்பட்டது. அவரும், அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதில் ஓய்வுபெற்ற அரசு சித்த மருத்துவர் குணசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) இந்திரா வழக்கு பதிவு செய்து விபத்து பற்றி விசாரணை செய்து வருகிறார்.
