×

ராஜஸ்தானில் நடந்த கார் விபத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அகால மரணம்: ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை: தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர்கள் ஜீவா, ‘ஜித்தன்’ ரமேஷ் ஆகியோரின் தந்தையும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனருமான ஆர்.பி.சவுத்ரி (74), நேற்று ராஜஸ்தானில் நடந்த கார் விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஆர்.பி.சவுத்ரியின் இயற்பெயர், ரத்தன்லால் பகத்ராம் சவுத்ரி. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அவரது சொந்த ஊரான உதய்பூருக்கு நேற்று மாலை 3 மணியளவில் காரில் சென்றபோது, எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி தவித்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் சென்னையிலுள்ள அவரது வீட்டுக்கு இன்று கொண்டு வரப்பட்டு, திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்படுகிறது.

ஆரம்பகாலத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் மலையாளத்தில் சில படங்களை தயாரித்த ஆர்.பி.சவுத்ரி, 1990ல் விக்ரமன் இயக்கிய ‘புது வசந்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமானார். முதல் படமே சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசு விருது பெற்றது. தொடர்ந்து ‘புரியாத புதிர்’, ‘சேரன் பாண்டியன்’, ‘ஊர் மரியாதை’, ‘கோகுலம்’, ‘நாட்டாமை’, ‘பூவே உனக்காக’, ‘செங்கோட்டை’, ‘சுந்தர புருஷன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் டுடே’, ‘சூர்யவம்சம்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘நீ வருவாய் என…’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’, ‘திருப்பாச்சி’, ‘ஜில்லா’ உள்பட பல படங்களை தயாரித்தார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களை தயரித்தார். தமிழில் அவர் தயாரித்த ‘சூர்யவம்சம்’, ‘சொல்லாமலே’, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்து தயாரித்தார். இதுவரை அவரது தயாரிப்பில் 98 படங்கள் உருவாகியுள்ளது. தற்போது 99வது படமாக விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ என்ற படத்தை தயாரித்து வந்தார்.

இதுவரை ஆர்.பி.சவுத்ரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், எஸ்.எழில், இராஜகுமாரன், சசி, பாலசேகரன், பிருந்தா சாரதி, எஸ்.ரவிமரியா உள்பட 34 இயக்குனர்களையும், பல நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு சுரேஷ், ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா ஆகிய 4 மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் ஜீவா, ஜித்தன் ரமேஷ் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஆர்.பி.சவுத்ரி தனது 100வது படத்தை விஜய்யை ஹீரோவாக வைத்து தயாரிக்க முடிவு செய்திருந்தார். இந்நிலையில், திடீரென்று அவர் கார் விபத்தில் உயிரிழந்தது திரையுலக வட்டாரத்தில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று நடிகர்கள் ரஜினிகாந்த், பவன் கல்யாண், சிரஞ்சீவி உட்பட பலர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். திரையுலகினர் பலர் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர். ஆர்.பி.சவுத்ரியின் மறைவுச்செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்த ‘மகுடம்’ படக்குழுவினர், அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

Tags : Rajasthan ,R. B. Chaudhry ,Rajinikanth ,Chennai ,Jeeva ,Jitan' Ramesh ,Super Good Films ,
× RELATED சட்டப்பேரவை தேர்தல் முடிவை தொடர்ந்து...