×

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பெரியகருப்பன் ஒரு வாக்கு தோல்வியில் குளறுபடி: தபால் வாக்குகள் மாவட்டம் மாற்றி அனுப்பப்பட்டதா? அதிகாலை வரை நடந்த வாக்கு எண்ணிக்கையால் பரபரப்பு

காரைக்குடி: திருப்பத்தூர் தொகுதியில் கேஆர்.பெரியகருப்பன் ஒரு வாக்கில் தோல்வி அடைந்ததில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அதிகாலை வரை சுமார் 18 மணி நேரம் நடந்த வாக்கு எண்ணிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் 2,75,904 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் 2,13,739 பேர் வாக்களித்து இருந்தனர். 77.47 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது.

இத்தொகுதியில் திமுக சார்பில் கேஆர்.பெரியகருப்பன், தவெக சார்பில் சீனிவாச சேதுபதி, பாஜ சார்பில் திருமாறன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரம்யாமோகன் உள்பட 15 பேர் போட்டியிட்டனர். காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை மொத்தம் 27 சுற்றுகளாக நடந்தது. முதல் சுற்றில் இருந்து 5வது சுற்றுவரை திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியை விட முன்னிலையில் இருந்தார். 6வது சுற்றில் சற்று பின்தங்கினார்.

பின்னர் 7வது சுற்று முதல் 10வது சுற்று வரை முன்னிலையில் இருந்தார். 11, 12வது சுற்றுகளில் பின்தங்கினார். தொடர்ந்து, 13வது சுற்றில் முன்னிலை, 14, 15வது சுற்றில் பின்தங்கினார். 16வது சுற்றில் முன்னிலை, அதனைத்தொடர்ந்து 17வது சுற்று முதல் 27வது சுற்றுவரை சற்று பின்தங்கினார். தபால் வாக்குகளை பொறுத்தவரை 2,275 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் 306 வாக்குகள் செல்லாதவை. மீதம் இருந்த 1,969 வாக்குகளை எண்ணியதில் திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன் 1,183 வாக்குகள், தவெக வேட்பாளர் 365 வாக்குகளும் பெற்று இருந்தனர்.

இதனிடையே வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு இயந்திரம் ஆன் ஆகாதது மற்றும் வாக்குப்பதிவு பெட்டியில் இருந்த எண்ணும், பூத் ஏஜென்ட்களிடம் இருந்த எண்ணும் மாறுபட்டு இருந்ததால், அந்த இயந்திரங்கள் எண்ணாமல் தனியாக வைக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இந்த 3 சுற்றுகளும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணாமல் விவிபேட்டில் பதிவான வாக்குகளை எண்ணினர். 28வது சுற்றில் விவிபேட்டில் இருந்த 642 வாக்குகளை எண்ணினர்.

இதில் கேஆர்.பெரியகருப்பன் 188, தவெக வேட்பாளர் 273 வாக்குகள் பெற்றிருந்தனர். 29வது சுற்றில் 622 வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் கேஆர்.பெரியகருப்பன் 214, தவெக வேட்பாளர் 311 வாக்குகள் பெற்று இருந்தனர். இந்த சுற்று முடிவு வரை திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன் 30 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இறுதியாக 30வது சுற்றில் பதிவான 394 வாக்குகளை எண்ணினர். அதில் தவெக வேட்பாளர் சீனிவாசசேதுபதி 31 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.

இதையடுத்து மொத்தம் 83,375 வாக்குகள் பெற்ற சீனிவாசசேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை திமுக தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்து கடைசியாக எண்ணிய விவிபேட் பதிவுகளை மீண்டும் எண்ண வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தவெக மற்றும் பாஜ தரப்பினர் முடிவுகளை ஏற்றுக்கொள்ளலாம் என கூச்சலிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பூத் ஏஜென்ட்கள் அனைவரையும் வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேற்றினர்.

தொடர்ந்து பரபரப்பு நிலவி வந்தநிலையில், வெற்றியை அறிவிப்பதில் நீண்டநேரம் இழுபறி ஏற்பட்டது. தொடர்ந்து ரேண்டம் அடிப்படையில் 5 விவிபேட் இயந்திரத்தை எண்ணி எடுத்து வந்தனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் தவெக வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்து நேற்று அதிகாலை 2 மணியளவில் சான்றிதழ் வழங்கினர்.

திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவானதன் அடிப்படையில் 82,191 வாக்குகளும், தபால் வாக்குகள் 1,183 சேர்த்து 83,374 வாக்குகள் பெற்றிருந்தார். தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவானதன்படி 83,010 வாக்குகளும், அஞ்சல் வாக்குகள் 365ஐயும் சேர்த்து 83,375 வாக்குகள் பெற்று இருந்தார்.

அதேநேரம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியாகி உள்ள தேர்தல் முடிவில் மொத்த வாக்குப்பதிவில் 2 வாக்குகள் கூடுதலாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 5 தபால் வாக்குகள் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிலாக திருப்பத்தூர் மாவட்டத்துக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த குளறுபடிகள் தொடர்பாக திமுக தலைமைக்கழகம் தரப்பில் வழக்கு தொடரப்பட உள்ளதாக தெரிகிறது.

* இரண்டாவது முறை ஒரு ஓட்டில் வெற்றி
சிவகங்கை மாவட்டத்தில் முன்பு தொகுதியாக இருந்த இளையான்குடியில் ஒரு வாக்கு வெற்றி சம்பவம் நடந்தது. இளையான்குடி சட்டமன்ற தொகுதிக்கு 1980ம் ஆண்டு திமுக சார்பில் மலைக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிவசாமி போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் முதல் இழுபறியாகவே இருந்து வந்தது. இறுதியாக மலைக்கண்ணன் 34,381 வாக்குகள் பெற்றார். இந்திய கம்யூ. வேட்பாளர் சிவசாமி 34,437 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையேயான ஓட்டு எண்ணிக்கை வித்தியாசம் 56 மட்டுமே.

இதை எதிர்த்து திமுக வேட்பாளர் மலைக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வாக்கு எண்ணிக்கை மிகக் கவனமாக நடத்தப்பட்டது. இறுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சிவசாமி வெற்றி பெற்றதாக மறுவாக்கு எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக ஒரே ஒரு ஓட்டில் வெற்றியைப் பறி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Periyakaruppan ,Tirupattur ,Karaikudi ,KR ,Sivaganga district ,
× RELATED சாலை விபத்தில் தயாரிப்பாளர்...