சென்னை: ஒன்றிய அரசின் ஆதரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தவெக தலைவர் விஜய் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளத்திலும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சமூக வலைதளத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ளதில், ‘‘மதிப்பிற்குரிய பிரதமரின் வாழ்த்துகளுக்கு நன்றி. நமது மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே குறிக்கோளாக திகழ்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநிலத்தின் முன்னேற்றத்திலும் தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் நாங்கள் முழுக்கவனம் செலுத்துவோம். இம்முயற்சியில் ஒன்றிய அரசின் ஆதரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’’. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்துள்ள பதிவில், ‘‘தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்கட்சித் தலைவருக்கு நன்றி. பொதுச்சேவையில் சிறந்து விளங்குவதிலும், அனைவரின் கூட்டு ஒத்துழைப்பும் தேவைப்படும். நமது மாநிலத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பேணிக்காப்பதிலும் நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருப்போம். அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம்’’ எனவும் பதிவிட்டுள்ளார்.
