ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம்; 2 வாரத்தில் பெரும்பான்மை நிரூபிப்பதாக அறிவிப்பு: நாளை பதவியேற்பு?

சென்னை: தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதிய தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் வழங்கவும் கோரிக்கை வைத்துள்ள நிலையில், நாளை விஜய் முதல்வராகப் பதவியேற்கும் விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் எந்தக் கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ளது. அதேநேரம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மட்டும் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

அதில், திமுக மட்டும் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 5, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூமஎம்எல் தலா 2 தொகுதிகள், தேமுதிக 1 ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாமக 4, அமமுக, பாஜ தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தற்போதைய சூழ்நிலையில், திமுக, அதிமுக கட்சிகள் அமைச்சரவை அமைப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அதே நேரத்தில் பாஜவை விஜய், கொள்கை எதிரி என்று அறிவித்துள்ளார். அக்கூட்டணியில் உள்ள பாமகவும் விஜய்யுடன் செல்லாது. இதனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் இன்று மாலை காங்கிரஸ் ஆதரவு தர இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ், விசிக ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரியுள்ளனர். மேலும், 2 வாரங்களில் தாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கக் கால அவகாசம் வழங்குமாரும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், விஜய் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களிடம் விஜய் முதல்வராக ஆதரவு அளிக்கும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் பெறப்பட்டது. இந்த சூழலில் விஜய் இன்று காலை தமிழக பொறுப்பு ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. நாளை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராகப் பதவியேற்கும் விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று சில அதிகாரிகளை அழைத்து விஜய் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை விஜய் முதல்வராக பதவியேற்றால், சில வாரங்களில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை விஜய் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய், அதில் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்யவேண்டும். இதனால் 107 தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 118 ஆதரவு தேவை. இதனால் காங்கிரஸ் (5), விசிக (2), மார்க்சிஸ்ட் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2) ஆகியோர் சேர்ந்தால் மெஜாரிட்டிக்கு தேவையான ஆட்கள் வந்து விடும். ஆனால் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேநேரத்தில் பாமக, அமமுக ஆகிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், முழு மெஜாரிட்டியை திரட்டி கூட்டணியுடன் சேர்ந்து அமைச்சரவை அமைப்பாரா அல்லது முதலில் தவெக நிர்வாகிகளுடன் அமைச்சரவை அமைப்பது, பின்னர் கூட்டணிகளுக்கு தனியாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது என்று முடிவு எடுப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  • தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
  • இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய், அதில் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்யவேண்டும். இதனால் 107 தொகுதிகள் உள்ளன.
  • மெஜாரிட்டிக்கு 118 ஆதரவு தேவை. இதனால் காங்கிரஸ் (5), விசிக (2), மார்க்சிஸ்ட் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2) ஆகியோர் சேர்ந்தால் மெஜாரிட்டிக்கு தேவையான ஆட்கள் வந்து விடும்.
  • விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரத்தில் பாமக, அமமுக ஆகிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: