பனையூரில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை; ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு விஜய் கடிதம்: பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் வழங்கவும் கோரிக்கை

 

சென்னை: ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநருக்கு கடிதம் எழுதிய தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளது. நேற்று தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் எந்தக் கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ளது. அதேநேரம் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மட்டும் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில், திமுக மட்டும் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ்5, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தலா 2 தொகுதிகள், தேமுதிக1 ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாமக 4, அமமுக, பாஜ தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தற்போதைய சூழ்நிலையில், திமுக, அதிமுக கட்சிகள் அமைச்சரவை அமைப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் பாஜவை விஜய், கொள்கை எதிரி என்று அறிவித்துள்ளார். அக்கூட்டணியில் உள்ள பாமகவும் விஜயுடன் செல்லாது.

இதனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இன்று மாலை காங்கிரஸ் ஆதரவு தர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ், விசிக ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்குக் மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக் கோரியுள்ளனர்.

மேலும், 2 வாரங்களில் தாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கக் கால அவகாசம் வழங்குமாரும் அந்தக் கடித்ததில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஆட்சி அமைப்பது தொடர்பாக விஜய் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். சில அதிகாரிகளை அழைத்து அவர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கவர்னர், நடிகர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம். அதன்பின்னர், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை விஜய் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

அதில் ஒரு பதவியை அவர் ராஜினாமா செய்வார். இதனால் 107 தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 118 ஆதரவு தேவை. இதனால் காங்கிரஸ்(5), விசிக(2), மார்க்சிஸ்ட்(2), இந்திய கம்யூனிஸ்ட்(2) ஆகியோர் சேர்ந்தால் மெஜாரிட்டிக்கு தேவையான ஆட்கள் வந்து விடும். ஆனால் நித்திய கண்டனம், பூரண ஆயுசு என்பதுபோல ஜஸ்ட்பாஸ் என்ற நிலைதான் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: