டெல்லி: தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸிடம் ஆதரவு கோரினார் தவெக தலைவர் விஜய் என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். நேற்று தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் எந்தக் கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ளது. அதேநேரம் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மட்டும் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில், திமுக மட்டும் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 5, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தலா 2 தொகுதிகள், தேமுதிக1 ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாமக 4, அமமுக, பாஜ தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தற்போதைய சூழ்நிலையில், திமுக, அதிமுக கட்சிகள் அமைச்சரவை அமைப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் பாஜவை விஜய், கொள்கை எதிரி என்று அறிவித்துள்ளார். அக்கூட்டணியில் உள்ள பாமகவும் விஜயுடன் செல்லாது.
இதனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸிடம் ஆதரவு கோரினார் தவெக தலைவர் விஜய் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு, உணர்வுக்கு மதிப்பளித்து தமிழ்நாடு காங். முடிவெடுக்கலாம். மதச்சார்பற்ற ஆட்சி உருவாக தமிழ்நாட்டு மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
விஜய்யின் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் முடிவெடுக்க அகில இந்திய காங். உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸிடம் விஜய் ஆதரவு கோரியதை காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் உறுதிப்படுத்தினார்.
