×

நம்மை அச்சுறுத்தும் அதிதீவிர ஆபத்து; குமரி நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகள்

 

* சமூக ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தும் கொடுஞ்செயல்
* தகுந்த திட்டம் தீட்டி தடுக்க கோரிக்கை

நீராதாரங்களை பாதுகாப்பதில் காட்டப்படும் அலட்சியம் வரும் தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகம். நமது சந்ததியருக்கு நாம் காசு, பணத்தை சேர்த்து வைக்கிறோமோ, இல்லையோ; சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், வளமான மண் போன்றவற்றை விட்டு செல்வது மிகவும் அவசியமாகும். நீர்நிலைகளில் சிறிதளவு கழிவுநீர் கலந்தால் ஒரு இயற்கையான செயல்முறையின் மூலம் தன்னைத்தானே சுத்தப்படுத்தி கொள்ளும். ஆனால், மக்கள்தொகை பெருக்கம் மற்றும் பெரிய அளவிலான நகரமயமாக்கல், கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றத்தை அதிகரிக்க வழிவகுத்துள்ளன.

கழிவுநீரின் அளவு அதிகரிப்பது, இந்த தன்னியக்க சுத்திகரிப்பு நிகழ்வை பாதித்து, நீர்நிலைகளில் ஆக்சிஜன் அற்ற நிலையை ஏற்படுத்துகிறது. மேலும் ரசாயன உரங்களின் பயன்பாடு அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பூமியில் உள்ள மற்ற திரவங்களைவிட நீரால் அதிக பொருட்களை கரைக்க முடியும் என்பதால், அது ஒரு ‘சர்வ கரைப்பான்’ என அழைக்கப்படுகிறது. இந்த நீரின் குணம், அதனை மாசுபாட்டிற்கு மிகவும் எளிதில் ஆளாகக்கூடியதாக ஆக்குகிறது. கழிவுகள், நச்சு பொருட்கள் கலப்பதால் நீர் எளிதில் மாசுபடுகிறது. பின்னர் அது உயிரினங்களுக்கும், அவற்றை சுற்றியுள்ள சூழல் அமைப்புகளுக்கும் கடும் அச்சுறுத்தலாக மாறுகிறது.

பாதுகாப்பற்ற நீரினால் காலரா, தோல் நோய்கள், கேன்சர், மலேரியா உள்ளிட்ட நோய்கள் தாக்கி 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அல்லது பாதுகாப்பாக குவித்து வைக்காமல் இருந்தால், அவை எளிதில் நீர்நிலை குப்பைகளாக மாறிவிடும். குப்பைகளை மறுசுழற்சி, உரம் அல்லது குப்பைத்தொட்டியில் போடாமல் தரையில் வீசும்போது, ​​மழை மற்றும் காற்று அவற்றை வடிகால்கள், ஓடைகள், கால்வாய்கள் மற்றும் ஆறுகளுக்குள் அடித்து செல்கின்றன. நீர்நிலைகளில் அல்லது அவற்றின் அருகில் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுவதன் மூலமும் அவை நீர்நிலைகளில் கலக்கின்றன.

இவற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் பல ஆண்டுகள் சுற்றுச்சூழலில் தங்கிவிடும். நீர்வாழ் குப்பைகள் கடலை அடைந்தவுடன், அவை கடல் சிதைவுகள் அல்லது கடல் குப்பைகளாக மாறுகின்றன. நீர்நிலைகளில் கலக்கும் குப்பைகள் நீரின் தரத்தை பாதிப்பதோடு, தாவரங்கள், விலங்குகள் உள்பட உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன, மேலும் நாம் சார்ந்திருக்கும் வெளிப்புற இடங்களை மாசுபடுத்துகின்றன. குப்பைகளை உயிரினங்கள் உட்கொள்வதாலும், அதில் சிக்குவதாலும் மூச்சுத்திணறல் அல்லது நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. பல உயிரினங்கள் பிளாஸ்டிக் குப்பைகளை உணவு என தவறாக நினைத்து உண்ணும்போது அல்லது தற்செயலாக வயிற்றுக்குள் செல்லும்போது செரிமான மண்டலத்தை சேதப்படுத்தி, உடல்நல பாதிப்பு மற்றும் உயிரிழப்புக்கு வழிவகுக்கும்.

ஆமைகள், கடற்பறவைகள் மற்றும் கடல் பாலூட்டிகள் உட்பட குறைந்தது 558 உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்படைந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். நெகிழி குப்பைகள் மட்காமல் 5 மி.மீக்கும் குறைவான ‘மைக்ரோபிளாஸ்டிக்ஸ்’ எனப்படும் மிகச்சிறிய துண்டுகளாக சிதைகின்றன. இவை சுற்றுச்சூழலில் கலந்தவுடன், அவற்றை சுத்தம் செய்வது கிட்டத்தட்ட சாத்தியம் அற்றது. இந்த நச்சு ரசாயனங்களால் உயிரினங்களுக்கு பெரும் அபாயங்கள் ஏற்படக்கூடும். நீர்வாழ் உயிரினங்கள் இந்த பிளாஸ்டிக் துகள்களை உண்ணும்போது, ​​இந்த நச்சு ரசாயனங்கள் உணவு சங்கிலியில் மேலே செல்லக்கூடும்.

உண்மையில் இன்று மக்கள் உண்ணும் பல்வேறு வகையான மீன்கள், நீர்நிலை உயிரினங்களில் ‘மைக்ரோபிளாஸ்டிக்ஸ்’ இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பவளப்பாறைகள், கழிமுகங்கள், கடற்கரைகள் மற்றும் ஆழ்கடல் உள்ளிட்ட பலதரப்பட்ட உயிரினங்களிலும், வாழ்விடங்களிலும் நெகிழி மாசுபாடு கண்டறியப்பட்டுள்ளது. நெகிழி முழுவதும் மக்காததால் சுற்றுச்சூழலில் தொடர்ந்து குவிந்து கொண்டே இருக்கிறது. குப்பை மாசுபாடு வாழ்விடங்களையும் சேதப்படுத்துகின்றன. குப்பைகள் சுற்றுப்புறத்தின் அழகை கெடுக்கின்றன. ஓரிடத்தில் குப்பைகள் குவியும்போது, ​​அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை உருவாக்குகின்றன.

மேலும் நோய்களை பரப்புவதோடு, தீ உள்ளிட்ட விபத்துகளையும் ஏற்படுத்துகின்றன. நீர்வாழ் குப்பைகள் மீன் இனங்களின் எண்ணிக்கை குறைவுக்கு வழிவகுக்கும். சுற்றுச்சூழலில் கலக்கும் குப்பைகளை சுத்தம் செய்வது அதிக செலவை ஏற்படுத்துகிறது. இது வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் சுற்றுலாவையும் பாதிக்கக்கூடும். கெட்டுப்போன நீர் மற்றும் உணவை எடுத்து கொள்வதால் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் கல்லீரல் அழற்சி மற்றும் டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். குடிநீரில் காணப்படும் அதிகப்படியான புளூரைடு, ‘புளூரோசிஸ்’ என்ற நோயை ஏற்படுத்துகிறது.

பல ஏழை நாடுகளில் கெட்டுப்போன நீர், குறைவாக சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்படாத நீரை பயன்படுத்துவதால் தொற்றுநோய்கள் அதிகமாகின்றன. நஞ்சாக கூடிய அடர்த்தியில் காட்மியம், குரோமியம், காரீயம் போன்ற கன உலோகங்கள், கனிம, கரிம பொருட்களை உள்ளடக்கிய கழிவுநீர், நீர்நிலைகளின் வெப்பநிலை மற்றும் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவையும் பாதிக்கின்றன. ஆற்றின் கரையோரங்கள், நீரோடைகள், குளம், குட்டைகள் உட்பட நீர்நிலைகளின் கரையோரங்கள், சாலை ஓரங்கள், பொது இடங்களிலும் இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், கட்டுமான கழிவுகள், வணிக வளாக கழிவுகள் போன்றவை பகல் மற்றும் இரவு நேரங்களில் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன.

இறைச்சி கழிவுகள் விலங்குகள் மற்றும் பறவைகளால் சிதறடிக்கப்படுகின்றன. மேலும் இவை அழுகி துர்நாற்றத்தை வீசுவதோடு, பல நோய்கள் பரவவும் காரணமாகின்றன. சில நேரங்களில் இவ்வாறு கொட்டப்படும் கழிவுகள் சமூக அக்கறை இல்லாத விஷமிகளால் தீ வைக்கப்படுகின்றன. இதனால் நச்சு வாயுக்கள், கரும்புகை வெளியேறி காற்றும் மாசடைகிறது. நீர்நிலைகளில் கழிவுகள் மற்றும் கழிவுநீர் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுதல், நீர்வாழ் உயிரினங்கள் அழிவு மற்றும் துர்நாற்றம் வீசி கடுமையான சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன. இது போன்ற சட்டவிரோத செயல்களால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், பொட்டல பொருட்கள் உள்ளிட்டவை நீர் வழித்தடங்களை அடைத்து, மண்ணில் மட்காமல், நிலத்தடி நீரை விஷம் ஆக்குகின்றன. கோழி, ஆடு போன்ற இறைச்சி கடைகளில் சேரும் கழிவுகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கின்றனர். இக்கழிவுகள் அதிக அளவில் சேர்ந்தவுடன் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது நீர்நிலைகளில் வீசி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் மற்றும் நோய் பரவல் ஏற்படுகிறது. மேலும் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அப்பகுதிகளில் சுற்றி திரியும் கால்நடைகள், நாய்கள் கழிவு மூட்டைகளை பிரித்து சாலை முழுவதும் சிதறடித்து விடுவதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கோழி இறகுகள் படர்ந்து கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்துகள் நிகழ்கின்றன. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் குளங்களில் விடப்படுகிறது. லாரிகளில் ஏற்றி வரப்படும் கட்டுமான கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் நதிக்கரைகள் மற்றும் குளங்களில் கொட்டப்படுகின்றன. இதனால் நீர்நிலை சுற்றுச்சூழல் அமைப்பு பாதிக்கப்பட்டு, நீர்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. கழிவுகள் மட்கி, அதில் உள்ள நச்சுத்தன்மை நிலத்தடி நீரில் கலந்து, குடிநீரை பாழாக்குகின்றன. கொசுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி, நோய்கள் பரவ வழி வகுக்கின்றன.

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். அருகில் உள்ள வனப்பகுதியிலும் குப்பைகள், பழைய மின்விளக்குகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட மட்கும், மட்கா மற்றும் ஆபத்தான கழிவுகள் கொட்டப்படுவதால், இந்த காடுகளில் உள்ள யானை, குரங்கு, மயில், மான், முயல் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குமரி மாவட்டத்தில் ராம்சார் தளமான சுசீந்திரம் – தேரூர் ஈரநில வளாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியான பறக்கை குளம் உள்ளது. இதன் கரைகளில் கட்டுப்பாடற்ற முறையில் கழிவுகள் கொட்டப்படுவது அந்த நீர்நிலைக்கு பெருகிவரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இது சுசீந்திரம் – தேரூர் ஈரநில வளாகத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை சுற்றியுள்ள உள்ளூர் மற்றும் வலசை பறவைகளின் வாழ்விடமாகவும் விளங்குகிறது. கேரளத்தில் இருந்து கழிவுகள் கொண்டுவரப்பட்டு, தமிழகத்தின் விளைநிலங்கள், நீர்நிலைகளில் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. கேரளத்தின் அருகாமை பகுதிகளான குமரி மாவட்டத்தில் இதுபோல் கழிவுகள் கொட்டப்படும் நிகழ்வு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. களியக்காவிளை, களியல், நெட்டா, காக்காவிளை மற்றும் குறுக்கு சாலைகள் வழியாக லாரிகள், டெம்போக்களில் கொண்டு வந்து இறைச்சி, மீன் மற்றும் மருத்துவ கழிவுகளை இங்குள்ள நீர்நிலைகள், மலையோரங்கள், சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர். இதில் என்ன கொடுமை என்றால், இந்த வாகனங்களை ஓட்டி வருவது குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர்கள்தான்.

பணத்திற்காக மாவட்டத்தின் சுகாதாரத்தை கெடுக்க இவர்கள் துணை போவது வேதனையாக உள்ளது. இதுபோல தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட கழிவுகளை கொண்டுவந்து சாலையோரங்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டப்படும் சம்பவங்கள் நீண்ட காலமாக தொடர்கின்றன. அரசு நிலங்களில் குப்பைகளை கொட்டுவது ஒருபுறம் இருக்க, தனியார் நிலங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவதும் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. பயனற்று கிடக்கும் தனியார் நிலங்களின் உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து, அதில் பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

இதற்காக கேரளத்தில் இருந்து கழிவுகளை எடுத்து வருவதற்கு ஏராளமானோர் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர். அவர்கள் இயற்கை வளத்தை பற்றி கவலைப்படுவது இல்லை. இவ்வாறு தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவுகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி கொசுக்கள், ஈக்கள், நோய் பரப்பும் கிருமிகள் உருவாகி, பரவி பொதுமக்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களை கொடுத்து பாடாய்ப்படுத்துகின்றன. கொட்டப்படும் இந்த குப்பைகளால் மண்வளம் பாழாகி வருகிறது. இந்த குப்பைகளில் இருந்து மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களை தரம்பிரித்து எடுத்து கொள்கின்றனர்.

மேலும் உபயோகமற்ற குப்பைகளை தீ வைப்பது, பள்ளங்களில் கொட்டி மண்ணை கொண்டு நிரப்புவது போன்ற செயல்களும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. பணத்துக்கு ஆசைப்பட்டு, மண்ணை பாழாக்கும் செயலுக்கு தீர்வு காண வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளாவிடில், தண்ணீரின் தரத்தில், சுற்றுச்சூழலில் விரும்பப்படும் முன்னேற்றம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும் என்கின்றனர்.

நீர் மாசுபாடு நமது பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு அவசரமான மற்றும் சிக்கலான சவாலாகும். நாம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமும், புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை புகுத்துவதன் மூலமும், அனைவருக்கும் தூய்மையான, பாதுகாப்பான நீர் கிடைக்கும் ஒரு எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியும்.

Tags : Kumari ,
× RELATED சட்டப்பேரவை தேர்தல் முடிவை தொடர்ந்து...