×

நான்கு சட்டமன்ற தொகுதிகளை தவெக கைப்பற்றியது அணைக்கட்டை வசப்படுத்திய அதிமுக வேலூர் மாவட்டத்தில்

வேலூர், மே 5: வேலூர் மாவட்டத்தில் அடங்கிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று மாலை நடந்து முடிந்த நிலையில் வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் என 4 சட்டமன்ற தொகுதிகளை தவெக கைப்பற்றிய நிலையில், அணைக்கட்டு தொகுதியை மட்டும் அதிமுக வசப்படுத்தியது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் இடம் பெற்றிருந்த 11,48,847 வாக்காளர்களில், 10,19845 பேர் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். இது 88.77 சதவீத வாக்குப்பதிவாகும். வேலூர் மாவட்ட தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, தவெக, நாதக உள்பட 65 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், திமுக சார்பில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், அமைச்சருமான துரைமுருகன், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோரும், களத்துக்கு புதியவராக டாக்டர் ராஜேஸ்வரியும், அதிமுக சார்பில் எஸ்.ஆர்.கே.அப்பு, ராமு, வேலழகன், பரிதா ஆகியோரும், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் சார்பில் ஜெகன்மூர்த்தியும், தவெக சார்பில் வினோத்கண்ணன், சுதாகர், வேல்முருகன், தென்றல்குமார், சிந்து ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் நின்றனர். வாக்குப்பதிவு 23ம் தேதி இரவு நடந்து முடிந்தவுடன் 5 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களுடன் போலீசார், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு என விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் ெசய்யப்பட்டன.

தொடர்ந்து, நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. ஒவ்வொரு சுற்று முடிவுகளும், ேதர்தல் நடத்தும் அதிகாரியின் ஒப்புதல் பெற்ற பிறகே தகவல் பலகையில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, காலை 7.30 மணியளவில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி வாக்கு எண்ணும் மையம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. இதில் வேலூர் தொகுதிக்கான வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் 5 நிமிடங்கள் மின்சாரம் நிறுத்தப்பட்டு மீண்டும் மின்இணைப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து, முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் மாவட்டத்தின் விஐபி தொகுதியான காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமுவும், வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேயனும், அணைக்கட்டு தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமாரும் முன்னிலை வகித்தனர். கே.வி.குப்பம் தொகுதியில் தவெக வேட்பாளர் தென்றல்குமார் முன்னிலை வகித்தார். குடியாத்தம் தொகுதியில் பரிதா முன்னிலை வகித்தார்.
அதைத்தொடர்ந்து காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 12 சுற்றுகள் வரை அதிமுக வேட்பாளர் ராமுவே முன்னிலை வகித்த நிலையில் 13வது சுற்றில் நிலைமை தவெகவுக்கு சாதகமாக மாறியது. அந்த சுற்றில் இருந்து தொடர்ந்து இறுதி சுற்றான 21வது சுற்றுவரை முன்னிலை வகித்த தவெக ேிவட்பாளர் சுதாகர் இறுதியில் 69,402 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த திமுக வேட்பாளரும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான துரைமுருகனை விட 5,670 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

அதேபோல், வேலூர் தொகுதியில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த திமுக வேட்பாளர் கார்த்திகேயன், 14வது சுற்று முதல் பின்தங்கி, 20 சுற்றுகள் முடிவில் 65,835 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வினோத்கண்ணன் 72,388 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். வாக்கு வித்தியாசம் 6,553 ஆகும். அணைக்கட்டு தொகுதியை பொறுத்தவரை ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமாருக்கும், அதிமுக வேட்பாளர் த.வேலழகனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் நான்கு சுற்றில் முன்னிலை வகித்து வந்த திமுக வேட்பாளர் நந்தகுமார், அதன் பிறகு பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தார். 23 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் வேலழகன் 76,302 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவர் திமுக வேட்பாளரை விட 7,081 வாக்குகள் அதிகம் பெற்றார்.

கே.வி.குப்பம் தொகுதியில் தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் தென்றல்குமார் முன்னிலை வகித்து வந்தார். 19 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தவெக வேட்பாளர் 74,305 வாக்குகளுடன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பூவை ஜெகன்மூர்த்தியை விட 20,255 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். குடியாத்தம் தொகுதியில் முதல் இரண்டு சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் பரிதா முன்னிலை வகித்த நிலையில் 3வது சுற்றில் திமுக முன்னிலை வகித்தது. 4வது சுற்றில் நிலைமை தவெக வேட்பாளர் சிந்துவுக்கு சாதகமாக மாறியது. இது 13 சுற்றுகள் வரை தொடர்ந்த நிலையில் 14வது சுற்றில் தேமுதிக முன்னிலை வகித்தது. அதை தொடர்ந்து மீண்டும் இறுதி சுற்றான 23வது சுற்று வரை தவெகவே முன்னிைல வகித்தது. இறுதியில் தவெக வேட்பாளர் சிந்து 82,858 வாக்குகளுடன், 10,097 வாக்குகள் தேமுதிக வேட்பாளர் பிரதாப்பை விட அதிகம் பெற்று வெற்றிபெற்றார். வாக்கு எண்ணிக்கை நடந்த போது, அப்பணியை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட மாவட்டத்தின் 5 தொகுதிகளுக்கான வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேர் தீவிரமாக கண்காணித்தனர்.

Tags : AIADMK ,Vellore district ,Anicut ,Vellore ,Katpadi ,K.V. Kuppam ,Gudiyatham ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரம் திடீர் பழுது...