வேலூர், மே 1: மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனை அடைந்த தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த கீழ்அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(30), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமான சில மாதங்களில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் அஜித்குமார் மனவேதனையில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்த அஜித்குமார், படுக்கை அறைக்கு சென்று, இரவு 11 மணி வரை சாப்பிட வெளியே வரவில்லையாம். அஜித்குமாரை சாப்பிட வரும்படி அவரது பெற்றோர் அழைத்தும் வரவில்லையாம். சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அஜித்குமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் அஜித்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
