×

புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்? 2 கட்டமாக இன்று வாக்கு எண்ணிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 2 கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மதியத்துக்கு பின் யார் ஆட்சி அமைப்பார் என்பது தெரிந்துவிடும். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15ம் தேதி வெளியானது. இத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜ, லஜக ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், திமுக, விசிக கூட்டணி அமைத்தும், தவெக, நாதக ஆகியோர் தனித்தும் மற்றும் சுயேச்சைகள் களமிறங்கினர். மொத்தம் 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

புதுவை- 845, காரைக்கால்- 181, மாகே- 31, ஏனாம்- 42 என 1,099 வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்.9ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. தபால் வாக்குகள் 1.36% உட்பட மொத்தமாக 91.23% வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு புதுவையில் உள்ள 23 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை அரசு மகளிர் பொறியியல் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி,

தாகூர் கலைக்கல்லூரி, காரைக்காலில் உள்ள 5 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கலைஞர் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையம், மாகேவில் ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாமில் டாக்டர் எஸ்.ஆர்.கே. கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த 6 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

4 முனைப்போட்டி என்றாலும் தேஜ கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இதில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பது அனைத்து தரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. தபால் வாக்குகளை எண்ணுவதற்காக 6 மையங்களில் 35 டேபிள்கள், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 166 டேபிள்கள் என மொத்தமாக 201 டேபிள்கள் வாக்கு எண்ணும் அறைகளில் போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை பணியில் கண்காணிப்பாளர்-265, வாக்கு எண்ணிக்கை உதவியாளர்-315, நுண் பார்வையாளர்-279 என மொத்தம் 859 பேர் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம், வாகனம் நிறுத்துமிடம் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தீயணைப்பு துறை மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்கவும், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு தேர்தல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்படுகிறது. முதற்கட்டமாக 17 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் 11 மணி வரையும், 2ம் கட்டமாக 13 தொகுதிக்களுக்கான வாக்கு எண்ணிக்கை மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடக்கிறது.

முதற்கட்டமாக மண்ணாடிப்பட்டு, ஊசுடு, வில்லியனூர், கதிர்காமம், தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, மாகே, ஏனாம் ஆகிய 17 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 2ம் கட்டமாக திருபுவனை, மங்கலம், உழவர்கரை, இந்திரா நகர், காமராஜ் நகர், காலாப்பட்டு, ராஜ்பவன், உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, மணவெளி, பாகூர், திருநள்ளார், நிரவி-டி.ஆர்.பட்டினம் ஆகிய 13 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

2வது சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே ஆட்சியை எந்த கூட்டணி பிடிக்க போகிறது என்பது தெரிய வரும். சுமார் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கையையொட்டி இன்று (மே 4ம் தேதி) மாநிலம் முழுவதும் மது, சாராயம், கள்ளுக்கடை உட்பட அனைத்து வகையான மதுக்கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Puducherry ,Puducherry Assembly ,
× RELATED பரிசோதனை முதல் சிகிச்சை வரை...