×

பரிசோதனை முதல் சிகிச்சை வரை குழந்தைகள் நீரிழிவு நோய்க்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல்: ஒன்றிய அரசு அறிமுகம்

புதுடெல்லி: குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் மேலாண்மை குறித்த முதல் தேசிய அளவிலான விரிவான வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நடந்த தேசிய சுகாதார மாநாட்டில் குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் மேலாண்மை குறித்த விரிவான வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. குழந்தைகள் நீரிழிவு நோய்க்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல் நிறுவப்படுவது இதுவே முதல் முறை.

இதன் மூலம் குழந்தைகள் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையை பொது சுகாதார அமைப்பில் இணைத்துள்ள சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீரிழிவு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக பிறப்பு முதல் 18 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் உலகளாவிய பரிசோதனையை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும், பொது மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு பரிசோதனை, நோய் கண்டறிதல் சேவைகள் மற்றும் நீரிழிவு நோயால் பாதித்த குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் சிகிச்சை, குளுக்கோமீட்டர்கள், சோதனை ஸ்ட்ரிப்கள் மற்றும் வழக்கமான பராமரிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கவும் இத்திட்டம் வகை செய்கிறது. இது குடும்பங்களின் நிதிச் சுமையை குறைக்கவும், நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு தடையற்ற சிகிச்சையை உறுதி செய்கிறது.

* பெற்றோர், ஆசிரியர் கவனத்திற்கு…
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு நோய் அறிகுறிகளை கண்டறிய 4டிக்கள் என்ற விழிப்புணர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

* அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* அதிக தாகம்
* அதிக சோர்வு
* உடல் மெலிதல்

ஆகிய இந்த அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. நோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் இறப்பு விகிதத்தை குறைக்கவும், சிக்கல்களை தடுக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் உதவும்.

Tags : Union government ,New Delhi ,India ,National Health Conference ,Delhi ,National Health Conference on Diabetes in Children… ,
× RELATED டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில்...