×

திருச்செந்தூரில் 60 அடி தூரம் திடீரென உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் பகுதியில் நேற்று சுமார் 60 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இருந்தபோதிலும் பக்தர்கள் வழக்கம் போல கடலில் புனித நீராடினர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. எனவே இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் புண்ணியமாக கருதுகின்றனர்.

பெரும்பாலான பக்தர்கள் உற்சாகமாக கடலில் புனித நீராடி, அதன்பிறகே முருக பெருமானை தரிசனம் செய்கின்றனர். வழக்கமாக இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களிலும் கடல் நீர் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும்.

இந்நிலையில் ஏப்.30 இரவு முதல் நேற்று முன்தினம் இரவு வரை பவுர்ணமி இருந்தது. நேற்று காலை திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே கடல் நீர் திடீரென சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் பச்சை நிறத்தில் வெளியே தெரிந்தது. ஆனாலும் பக்தர்கள் வழக்கம் போல கடலில் புனித நீராடினர்.

Tags : Tiruchendur ,Tiruchendur Subramanya Swamy Temple ,
× RELATED இறக்குமதி பருத்திக்கு வரி விதிப்பு...