மதுரை: பொதுநல மனு என்ற பெயரில் தேவையற்ற மனுக்களை கட்டுப்படுத்த ஐகோர்ட் கூறியுள்ளது. தென்காசி மாவட்டம், திப்பணம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘திப்பணம்பட்டி கிராமத்தில் தனியார் வீட்டு மனை லே-அவுட் போடப்பட்டது. இதற்காக அந்த இடத்தில் இருந்த 74 பனை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஒரு மரத்திற்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை முறையாகப் பின்பற்றவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர், ‘‘மனுதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் முன்னாள் தலைவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதன் மூலம் இந்த மனு பொதுநலன் சார்ந்தது அல்ல. தனிப்பட்ட உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்களை ஏதேனும் ஒரு வகையில் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காகவே மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. பொதுநல மனு என்ற பெயரில் வரும் இதுபோன்ற தேவையற்ற மனுக்களை கட்டுப்படுத்த வேண்டும். இது முழுவதும் தனிப்பட்ட நலன் சார்ந்தது’’ எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
