‘இனி தப்பு செய்யாதவர்களுக்கும் ஜெயில்’ ரூ.500 செலுத்தி ஒரு நாள் சிறையில் இருக்கலாம்: தெலங்கானா சிறைத்துறை புதுத்திட்டம்

திருமலை: ஒரு நாள் சிறை வாழ்க்கை என்ற திட்டத்தின் மூலம் ரூ.500 செலுத்தி ஒரு நாள் முழுவதும் சிறையில் இருக்கும் புது திட்டத்தை தெலங்கானா சிறைத்துறை கொண்டுவர உள்ளது. தெலங்கானா மாநில சிறைத்துறை சாதாரண மக்களுக்கு சிறை வாழ்க்கையை அனுபவிக்க வாய்ப்பு அளிக்க உள்ளது. அதன்படி, ஐதராபாத்தில் உள்ள சஞ்சலகுடா மத்திய சிறையில் ‘ஒரு நாள் சிறை வாழ்க்கை’ என்ற புதுமையான திட்டம் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இத் திட்டத்தின்படி, எந்தக் குற்றமும் செய்யாத சாதாரண குடிமக்கள் கூட, வெறும் ரூ.500 கட்டணம் செலுத்தி, ஒரு உண்மையான கைதியைப் போல 24 மணி நேரம் சிறையில் கழிக்கலாம்.

இதைக் கேட்பதற்கு வேடிக்கையாக தோன்றினாலும், இதன் பின்னணியில் உள்ள விதிகள் மிகவும் கடுமையானவை. சிறைக்குச் செல்லும் ஒருவர் தனது சொந்த ஆடைகளைக் கழற்றி வைத்துவிட்டு சிறை அதிகாரிகளால் வழங்கப்படும் சீருடையை மட்டுமே அணிய வேண்டும். மேலும், மொபைல், கைக்கடிகாரங்கள் அல்லது வேறு எந்த மின்னணுப் பொருட்களும் உள்ளே அனுமதிக்கப்படாது. சிறை அனுபவம் என்பது வெறும் சிறை அறையில் அமர்ந்திருப்பதோடு நின்றுவிடுவதில்லை. அங்குள்ள கைதிகளைப் போலவே, அவர்களும் அதிகாலையில் எழுந்து, சிறை உணவுப் பட்டியலின்படி வழங்கப்படும் பருப்பு, சாதம், சூப் போன்ற எளிய உணவுகளை உண்டு, சிறை வளாகத்தைச் சுத்தம் செய்தல் மற்றும் தோட்ட வேலைகள் போன்றஅதிகாரிகளால் ஒதுக்கப்படும் பணிகளைச் செய்ய வேண்டும்.

உறங்குவதற்குப் படுக்கையோ மெத்தையோ இல்லை. அவர்கள் தரையில் ஒரு பாய், ஒரு போர்வை மற்றும் தலையணையுடன் மட்டுமே இரவைக் கழிக்க வேண்டும். சுதந்திரம் இல்லாத வாழ்க்கை எவ்வளவு சுமையாக இருக்கும் என்பதையும், கடுமையான சிறை விதிகளுக்கு மத்தியில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதையும் சாமானிய மக்களுக்குப் புரிய வைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சிறையின் கடுமையான வாழ்க்கையை, குறிப்பாகக் குற்றப் பாதையைத் தேர்ந்தெடுக்க நினைப்பவர்களுக்கு காண்பிப்பதன் மூலம், அவர்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர சிறைத்துறை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Related Stories: