கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நகராட்சி பணியாளர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக மேற்குவங்க அமைச்சர் சுஜித் போஸ் நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசில், பிதான் நகர் தொகுதி பேரவை உறுப்பினராகவும், தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் துறை அமைச்சரா கவும் சுஜித் போஸ் பதவி வகித்து வருகிறார். தெற்கு டம் டம் தொகுதியில் நகராட்சி பணியாளர் நியமனத்தில் ஆள் சேர்ப்பில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் ஒருபகுதியாக, சுஜித் போஸ் மற்றும் அவரது மகன் சமுத்ரா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஊழல் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பிதான்நகர் தொகுதியில் போட்டியிடும் சுஜித் போஸ் பிரசாரங்களில் ஈடுபட இருந்ததால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்திருந்தார். இந்நிலையில் நகராட்சி பணியாளர் நியமன ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு சால்ட் லேக் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு சுஜித் போஸ் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.
