புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் 142 தொகுதிகளுக்கான 2வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன் தினம் நடந்து முடிந்தது. இதில் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள 77 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் உள்ளிட்ட பல தரப்பிலும் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் சென்றுள்ளன.
வாக்கு இயந்திரம் முறைகேடு, ஸ்பை கேமரா பயன்பாடு என முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவின் பேரில் சிறப்பு பார்வையாளர் சுப்ரதா குப்தா நேரில் ஆய்வு கொண்டு அதன் அடிப்படையில் மறுவாக்குப்பதிவு குறித்து அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
