கொல்கத்தா: முதல்வர் மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள காணொலி செய்தியில் கூறியதாவது:பாஜ அலுவலகத்திலிருந்து பரப்பப்பட்ட தேர்தல் கணிப்புகளைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன. அது ஒளிபரப்பப்படுவதை உறுதிசெய்ய பணம் கொடுக்கப்பட்டது. என்னிடம் அதற்கான உறுதியான தகவல் உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியைக் குலைப்பதற்காக, பாஜவின் அறிவுறுத்தலின் பேரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே மக்களின் கருத்தை மாற்றுவதற்கான ஒரு பெரிய சதியின் ஒரு பகுதிதான் இந்தக் கருத்துக் கணிப்புகள்.
ஆனால், நாங்கள் 226 இடங்களை வெல்வோம். 230 இடங்களைக் கூட தாண்டக்கூடும். மக்கள் வழங்கிய இந்த மாபெரும் மக்கள் ஆணையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அமித் ஷாவின் நேரடி உத்தரவுகளின் பேரில், தேர்தல் செயல்முறைகள் அனைத்தும் மத்திய படைகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய படைகள் பாஜவின் முகவர்களாகச் செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
