சென்னை: வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் சருமத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் இந்தாண்டு கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. ஏப்ரல் இறுதி வாரத்திலேயே பல மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ள நிலையில், மக்கள் தினசரி வாழ்வில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெளியில் வேலை செய்பவர்கள், மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
கோடை வெயிலில் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவது சருமம்தான். வியர்வை அதிகமாகச் சுரப்பதால் வியர்க்குரு (Heat Rash) ஏற்படுகிறது. இது தோலில் சிவப்பு நிற சிறு புள்ளிகளாக, அரிப்புடன் தோன்றும். நேரடியான வெயிலில் நீண்ட நேரம் இருந்தால் வெயில் சுட்டு தோல் சிவத்தல் (Sunburn) ஏற்பட்டு, தொடும்போது வலி தரும். மேலும், அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக பூஞ்சைத் தொற்று (Fungal Infections) தொடைகளிலும், கக்கத்திலும் அதிகரிக்கிறது. சிலருக்கு வியர்வை காரணமாக பிம்பிள்கள் மற்றும் கரும்புள்ளிகள் முகத்தில் அதிகரிக்கும்.
இந்த நேரத்தில் வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால், குடை, தொப்பி அல்லது துணியால் தலை மற்றும் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும். பருத்தி துணிகளால் தயாரிக்கப்பட்ட இலகு நிற ஆடைகளை அணிவது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும். சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்துவது முக்கியம். மேலும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தினமும் 34 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர் போன்ற நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். கஃபீன் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
சரும பராமரிப்பில், நாள்தோறும் இரு முறை குளித்து வியர்வையை அகற்றுவது முக்கியம். மென்மையான சோப்பு மற்றும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது சரும உலர்ச்சியைக் குறைக்கும். வெயிலில் இருந்து வந்த உடனே குளிர்ந்த நீரில் முகம் கழுவுவது எரிச்சலை குறைக்க உதவும். குழந்தைகள், வயதானவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அரிப்பு, சிவத்தல், வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக தோல் மருத்துவரை அணுகவும்.
இது தொடர்பாக சிம்ஸ் மருத்துவமனை தோல் மருத்துவர் ஷர்மதா கூறியதாவது: கோடை காலத்தில் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் வியர்வை அதிக அளவில் சுரக்கும். அந்த வியர்வை சருமத்தில் தங்குவதால் அது வியர்க்குருவாக மாறுகிறது. அது மட்டுமின்றி, இந்த வியர்வை கை மற்றும் தொடை இடுக்குகளில் தங்கினால் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாகப் பூஞ்சைத் தொற்று அதிக அளவில் ஏற்படும். சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். சன்ஸ்கிரீன் என்பது சருமத்திற்கு ஏற்றவாறு வேறுபடும். குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு, வறண்ட சருமம், எண்ணெய்ப் பசை சருமம் என சரும வகைக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக SPF 50 மற்றும் அதற்கு மேல் உள்ள சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். வெளியில் செல்வதற்கு 30 நிமிடங்கள் முன்பே சருமத்தில் தடவ வேண்டும். தற்போது கோடைக்காலம் என்பதால் வெளியில் செல்லும் போது மட்டுமின்றி வீட்டில் இருக்கும் போதும் பயன்படுத்துவது நல்லது. வெயில் காலத்தில் வியர்வை பிறப்புறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் தங்கி நோயாக மாறும் எனவே அங்குள்ள முடியை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். தற்போது கோடைக் காலம் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* சருமத்தை காக்கும் நீரேற்றம் மற்றும் உணவுகள்
சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்க போதுமான நீர்ச்சத்து அவசியம். ஒரு நாளுக்கு குறைந்தது 34 லிட்டர் தண்ணீர் குடிப்பது சரும ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். தண்ணீர் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுவதுடன், சருமத்தை மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கிறது. நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் சருமத்தை பாதுகாக்கும் முக்கிய காரணி. குறிப்பாக தர்பூசணி, வெள்ளரிக்காய், மாதுளை, ஆரஞ்சு போன்ற பழங்களில் அதிகளவு நீரும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இவை சருமத்தை UV கதிர்களின் பாதிப்பிலிருந்து ஒரு அளவுக்கு பாதுகாக்க உதவுகின்றன. மேலும், மோர் மற்றும் தேங்காய் நீர் போன்ற பானங்கள் உடலை குளிர்விக்க உதவுவதுடன், மினரல்கள் மற்றும் எலக்ட்ரோலைட்களை வழங்குகின்றன. இவை நீர்ச்சத்து சமநிலையை பராமரித்து, வெப்பத்தால் ஏற்படும் சோர்வு மற்றும் சரும உலர்ச்சியை குறைக்கின்றன. வைட்டமின் C மற்றும் E நிறைந்த உணவுகள் (பழங்கள், கீரைகள், பருப்புகள்) சருமத்தைப் பாதுகாக்கவும், புதுப்பிக்கவும் உதவுகின்றன.
* எந்த வகையான ஆடை
சருமத்திற்கு நல்லது
வெயிலில் செல்லும் போது சருமத்திற்கு எரிச்சல் தராத மென்மையான பருத்தி ஆடைகளை அணிவது காற்றோட்டத்தை உறுதி செய்து வியர்க்குரு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கும். கறுப்பு நிற ஆடைகளைத் தவிர்த்து, வெளிர் நிற ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது வெப்பத்தை குறைவாக உறிஞ்சி உடலை நீண்ட நேரம் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
* சரும பராமரிப்பு டிப்ஸ்
நாள்தோறும் இரண்டு முறை (காலையிலும் மாலையிலும்) குளித்து வியர்வையை அகற்ற வேண்டும். மென்மையான ஜெல் அல்லது போம் அடிப்படையிலான சோப்பு பயன்படுத்த வேண்டும். லைட் வெயிட், ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும். வெயிலில் இருந்து வந்த உடனே குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல் அல்லது குளிர்ந்த முகமூடி (வெள்ளரி துண்டுகள்) எரிச்சலை ஆற்ற உதவும். பூஞ்சைத் தொற்றைத் தடுக்க வியர்வை பகுதிகளை (கக்கம், தொடை இடுக்கு, பிறப்புறுப்பு) நன்கு உலர வைக்கவும். ஆன்டிபங்கல் பவுடர் பயன்படுத்தலாம். ஈரமான ஆடைகளை உடனடியாக மாற்றுங்கள். துண்டு, உடைகளை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
