மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளான 9 போலீசாரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்யக் கோரிய மனு மீது ஜூன் 4 முதல் தினசரி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், அதே ஊரில் செல்போன் கடை வைத்திருந்தனர். இருவரும் கடந்த 2020, மார்ச் மாதம் கொரோனா காலத்தில், விதிமுறைகளை மீறி கடையை அதிக நேரம் திறந்து வைத்ததாக சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ கொலை வழக்காக மாற்றி, ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 போலீசாரை கைது செய்தனர். அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த ஏப். 6ம் தேதி, 9 போலீசாருக்கும் தூக்குத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தக் கோரி, சிபிஐ மற்றும் தமிழக அரசு தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்த வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சிறையில் உள்ள 9 பேரும் காணொலி வாயிலாக ஆஜராகினர்.
அப்போது நீதிபதிகள், ‘‘தனித்தனியாக வாதாடுவதற்கு வழக்கறிஞர்களை நியமித்துவிட்டீர்களா’’ என குற்றவாளிகள் 9 பேரிடமும் கேள்வி எழுப்பினர். 2வது குற்றவாளி பாலகிருஷ்ணன், 6வது குற்றவாளி முத்துராஜா ஆகிய இருவர் மட்டும் வழக்கறிஞரை நியமித்து விட்டதாக தெரிவித்தனர். மற்றவர்கள் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது வழக்கறிஞர்களை நியமித்து விடுவதாக கூறினர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நகல், குற்றவாளிகளுக்கு விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.
அப்போது, இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ஸ்ரீதர் மேல்முறையீடு செய்வதற்கான மனு தயாரிப்பதற்காக 15 நாட்கள் சாதாரண சிறை விடுப்பு வேண்டும் என்றார். அதற்கு நீதிபதிகள், ‘‘மேல்முறையீடு மனு தயாரிப்பதற்கு போதிய வசதிகளை சிறைத்துறை செய்து தரும். எனவே விடுமுறை தருவது குறித்து நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஜூன் 1ம் தேதி வழக்கு தாக்கல் செய்யுங்கள். ஜூன் 4ம் தேதி முதல் தினந்தோறும் வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும்’’ எனக்கூறி விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
