×

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம் 20 லட்சம் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்: கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்று வழிபட்டனர். மேலும், 6 மணி நேரம் காத்திருந்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தென்னகத்து கயிலாயம் எனும் சிறப்பு மிக்கது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். முழுமதி நிறைநாளில், பிறைசூடிய பெருமானை வலம் வந்து வழிபடுவது சிறப்பு என்றாலும், சித்திரை மாதத்தில் அமையும் சித்ரா பவுர்ணமியன்று கிரிவலம் செல்வது ஆண்டுதோறும் கிரிவலம் சென்ற நிறைவை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு இணையாக, சித்ரா பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

இந்நிலையில், பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, அதிகாலை தொடங்கி இரவு 10 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக திரண்டதால், மாட வீதியில் பெரிய தெரு வரை தரிசன வரிசை நீண்டது.

சுட்டெரித்த கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், மோர், பிஸ்கட், தர்பூசணி போன்றவை வழங்கப்பட்டன. மேலும், தரிசன வரிசை அமைந்த இடங்களில் தற்காலிக நிழற்பந்தல் சுமார் 1 கி.மீ. தூரம் வரை வசதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 9.52 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று மாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்லத்தொடங்கினர்.

இரவு 9 மணிக்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்காக உயர்ந்தது. இரவு முழுவதும் விடிய விடிய சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மே தினம் மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் அமைந்ததால், நேற்று இரவு வழக்கத்தைவிட பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்திருந்தது. அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தூரமும் பக்தர்கள் வெள்ளத்தால் மூழ்கியது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க சன்னதிகள், இடுக்கு பிள்ளையார் கோயில் உள்ளிட்ட சன்னதிகளை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

எனவே, அனைத்து சன்னதிகளிலும் கூட்டம் அலைமோதியது. கிரிவல பக்தர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து நாளை வரை 5,669 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வழக்கமான தினசரி ரயில்கள், வாராந்திர ரயில்கள் உள்பட விழுப்புரம், காட்பாடி வழியாக 32 சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, 4,240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று இரவு 11.08 மணி வரை அமைந்திருப்பதால், இன்றும் பக்தர்கள் வருகை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chitra Pournami festival ,Tiruvannamalai ,Vida Vidya ,Girivalam ,Lord Shiva ,
× RELATED மே தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து