மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி – திருக்கடையூர் சாலை ஓரம் நுங்கு விரப்பணி செய்யப்பட்டு கொண்டிருந்த இடத்திற்கு வந்த குரங்கு ஒன்று, நுங்கு வியாபாரி கொடுத்த வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட மறுத்து அடம்பிடித்து பனை நுங்கு கேட்டு வாங்கி சாப்பிட்ட நிகழ்வு வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குரங்கையும் – வாழைப்பழத்தையும் பிரிக்கவே முடியாது என்று சொல்ல கேட்டிருப்போம், வாழைப்பழம் வேண்டாம் என்று சொல்லும் குரங்கு உண்டா என்று பலரும் வேடிக்கையாக சொல்வார்கள். பொதுவாக “குரங்கு எங்கேயாவது வாழைப்பழம் வேண்டாம் என்று சொல்லுமா?” என்பது ஒருவரின் இயற்கையான ஆசையை அல்லது தனக்குத் தகுதியான பொருளை வேண்டாம் என்று சொல்லும் முட்டாள்தனத்தைக் குறிக்கும் ஒரு பேச்சுவழக்குச் சொல்லாடலாகும்.
ஆனால் இந்த பழமொழியை பொய்யாக்கும் வகையில் குறிப்பிட்ட குரங்கு தனக்கு கொடுக்கப்பட்ட வாழைப்பழத்தை வேண்டாம் என்று மறுத்து நுங்கு வியாபாரியிடம், நீங்கள் வைத்திருக்கும் பனை நுங்கு தான் வேண்டும் என்று குழந்தை போல அடம்பிடித்து கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளது. இந்த அழகிய தருணம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கடும் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், நுங்கு வியாபாரியிடம் அந்த குரங்கு ஏதோ வேண்டும் என்பது போல சமிக்ஞை செய்தது. உடனே அந்த நுங்கு வியாபாரி தன்னிடம் இருந்த வாழைப்பழத்தை கொடுத்த நிலையில், அவர் விற்பனை செய்த நுங்கை வேண்டுமென்று கேட்டு அடம்பிடித்து உள்ளது. இதனையடுத்து அந்த வியாபாரி நுங்கை கொடுத்ததும், வெயிலுக்கு இதமாக அதனை மகிழ்ச்சியுடன் சாப்பிட்டது.
சுவை பிடித்து விட்டதால், மீண்டும் வந்து தனக்கு நுங்கு கொடுக்க வேண்டுமென்று மரத்தின் மீதேறி கொண்டு அடம்பிடித்துள்ளது. பிறகு மற்றுமொரு நுங்கை கொடுத்துள்ளார் வியாபாரி. வெப்பம் தகிக்கும் சூழலில் குரங்கு வாழைப்பழம் வேண்டாம் என்று மறுத்து அடம்பிடித்து நுங்கு கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ள சம்பவம் அடங்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
