பாலியல் வன்முறை செய்து சிறுமியை கொன்ற வழக்கில் காவல் ஆய்வாளர், துணை நின்ற அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்: சமூக செயற்பாட்டாளர் கோரிக்கை

சென்னை: கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் மற்றும் துணை நின்ற அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் கோரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ், தந்தை பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: 2025 டிசம்பர் 11ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இரண்டரை வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட காவல்துறை எல்லைக்கு உட்பட்ட அதிகாரிக்கு குறிப்பாக அன்றைய காவல் ஆய்வாளராக இருந்த சுமித்ராவிற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தல் நடைமுறை விதிகளின்படி சுமித்ரா பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். பிப்ரவரி மாதத்தில் பொறுப்பேற்ற புதிய காவல் ஆய்வாளர் கந்தவேல் அதிகாரிகளிடமிருந்து விவரங்களை பெற்று, இரண்டு மாதங்களாக கிடப்பில் இருந்த வழக்கை எடுத்து, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, குற்றச்சாட்டுக்குட்பட்ட பெரிய நாயகத்தை கைது செய்தார். இரண்டரை வயது பச்சிளம் குழந்தை பாலியல் சித்ரவதைக்கு உட்படுத்தபட்டு கொலை செய்யப்பட்டது தெரிந்தும் இரண்டு மாதங்களாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத காவல் ஆய்வாளர் சுமித்ராவை பணியில் இருந்து மட்டும்தான் சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். ஆனால் அவருடன் துணை நின்ற அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும், காவல் ஆய்வாளர் சுமித்ரா மற்றும் துணை நின்ற அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories: