வெற்றி, தோல்வி சகஜம் தேர்தல் முடிவுகளால் யாரும் தவறான முடிவுகள் எடுக்கக்கூடாது: நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள்

சென்னை: தேர்தல் முடிவுகளை இளைஞர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பாரிமுனையில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களின் சமூக வலைதளப் பதிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது. சட்டமன்ற தேர்தலில் 4 பெரிய கட்சிகளும் வெற்றி பெற முடியாது. ஏதேனும் ஒரு கட்சிதான் வெற்றி பெற முடியும். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்களுடைய கட்சித் தலைவரும் கட்சியும்தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். வெற்றி பெறாவிட்டால் இதனை தாங்கிக் கொள்ளக்கூடிய சகஜ மனநிலை வேண்டும்.

இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் இந்திரா காந்தி, அண்ணா, ஜெயலலிதா போன்ற நிறைய தலைவர்கள் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். எனவே, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும், நடிகைகளும் வெற்றி தோல்வியை குழந்தைகள், இளம் தலைமுறையினர் சகஜமாக எடுத்து கொள்ள வேண்டுமென்று அறிக்கை வெளியிட வேண்டும். உங்களுடைய தலைவர்கள் வெற்றி பெற்றால் கொண்டாடுங்கள், இல்லையென்றால் அடுத்த தேர்தலுக்கு தயாராகுங்கள். வெற்றி தோல்வியை சகஜமாக எதிர்கொள்ளும் மனப்பான்மை குழந்தைகளுக்கும், இளம் தலைமுறையினருக்கும் இருக்க வேண்டும். வெற்றி பெறாவிடில் சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு தவறான முடிவையும் எடுக்க வேண்டாம்.

தமிழகத்தில் தற்போது நிலவும் இந்த சூழலுக்கு சமூகவலைதளங்கள்தான் முழுக் காரணம். இதற்கான சேவை மையம், உதவி மையங்களை தேர்தல் ஆணையம் அமைக்க வேண்டும். விஜய்யின் ரசிகர்களை குறிப்பிட்டு சொல்லவில்லை. அனைத்துக் கட்சி வாக்காளர்களுக்கும் தான் அறிவுரை சொல்கிறேன். இதில் அரசியல் சாயம் பூச வேண்டாம். இது பொது பிரச்னையாக இருந்து வருகிறது. அனைத்து தலைவர்களும் சேர்ந்து செயல்பட வேண்டும்.
தேர்தல் நடைமுறைகள் குறித்து கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு தவெகவுக்கு வாக்களிக்க பெற்றோர்களிடம் வலியுறுத்த வேண்டும் என்று விஜய் பேசியது குறித்த கேள்விக்கு தான் எந்த கட்சியையும் குறிப்பிட்டு கருத்தும் தெரிவிக்கவில்லை. அனைத்து கட்சியை சேர்ந்தவர்களுக்கும்தான் எனது இந்த வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: