200 தொகுதிகளை தவெக வெல்லும் என்பதெல்லாம் ஓவர் சத்தம் மே 4ம் தேதி வரை கனவு கண்டு கொள்ளட்டும்: தமிழிசை கிண்டல்

சென்னை: பாஜ மூத்த தலைவர் தமிழிசை நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் விஜய் ஒரு நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால் அதற்காக, குழந்தைகளை பெற்றோரிடம் அடம் பிடித்து, தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்த கூறுவதெல்லாம் தவறு.

குழந்தைகளை பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பது ஒரு விதியாக இருக்கும்பொழுது, அவர் கூறியது குழந்தைகளின் மனதில் ஒரு தவறான கருத்தை விதைப்பது போல் ஆகிவிடும். குழந்தைகள் படிக்க வேண்டும், அவர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும், அதைவிடுத்து இதைபோல் செயல்படுவது, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை, தம்பி விஜய் உணர வேண்டும்.

விஜய் செய்வது அனைத்தும், சுயநல அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறதோ? என பயமாக இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தேர்தலுக்கு முன்னால் தான் எந்த அடையாளத்தையும் காண்பிக்க மாட்டேன் என்று இருந்த நிலையில், தேர்தலுக்குப் பின்பு தற்போது, சில அடையாளங்களை காண்பிக்கிறார். இறைவனை அனைவரும் கும்பிடலாம். அது ஆரோக்கியம் தான். ஆன்மிக பயணத்தை நான் என்றும் குற்றம் சொல்ல மாட்டேன், நடிகர் விஜய் தற்போது வெளிப்படையாக சாமி கும்பிடுகிறார்.

அந்த வகையில் நான் அவரை பாராட்டுகிறேன். 200 தொகுதிகளை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் விசில் சத்தம் வெல்லும் என்பதெல்லாம், ஓவரான சத்தம், இது அபரிமிதமான சத்தம், விசிலுக்கு என்று ஒரு சத்தம் உள்ளது. அதை தாண்டி எல்லாம் அவர்களால் சத்தம் போட முடியாது. அவ்வாறு கேட்டால் அது ஃபாம் அல்லது வெடி சத்தமாக தான் இருக்கும். 200 தொகுதி என்பது இது மிக பிரமாண்டமான கனவு.

கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. நான்காம் தேதி வரை என்னென்ன வேண்டுமானாலும் கனவு காணலாம். திருமாவளவன் மிகவும் குழம்பி போய் உள்ளார். ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு ஒரு மாதிரி பேசுகிறார். விஜய் தற்போது ஆன்மிக தேடலுக்கு செல்கிறார். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, திரைப்பட சூட்டிங் இருக்கும், அதற்கு இடம் தேட போகிறாரா என்பது சந்தேகமாக உள்ளது. இவ்வாறு தமிழிசை கூறினார்.

Related Stories: