வாழைத்தோட்டத்தை துவம்சம் செய்த யானைகள்

மேட்டூர், ஏப்.29: மேட்டூர் அருகே ஊருக்குள் புகுந்த யானைகள், வாழைத்தோட்டத்தை துவம்சம் செய்ததால் கிராம மக்கள் பீதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் வனப்பகுதியை ஒட்டி நீதிபுரம், சின்னதண்டா, பெரியதண்டா, நாய்க்கன்தண்டா, தார்காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அருகில் உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. கோடை வெயில் கொளுத்தி வருவதால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால், யானைகள் உணவு- தண்ணீர் தேடி கிராமங்களில் நுழைந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நீதிபுரம் கிராமத்திற்குள் யானைகள் புகுந்தன. தொடர்ந்து மோகன் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்திற்குள் நுழைந்து மரங்களை துவம்சம் செய்தன. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், யானைகள் நடமாட்டத்தை கண்டு திடுக்கிட்டனர்.

உடனே, பட்டாசு வெடித்தும், டமாரம் அடித்தும் யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால், யானைகள் சிறிது நேரம் போக்கு காட்டியபடி அங்கிருந்து செல்ல மறுத்தன. இதுகுறித்த தகவலின்பேரில், வனத்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும், மாலை நேரங்களில் வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: