உச்சி வெயில் நேரத்தில் தீவனம் அளிக்க கூடாது

சேலம், ஏப்.23: கோழிகளுக்கு ஏற்படும் வெப்ப அயற்சி பாதிப்பை தடுக்க உச்சி வெயில் நேரத்தில் தீவனம் அளிக்க கூடாது என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சேலம் சரக மாவட்டங்களில் நாள்தோறும் 100 பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் கால்நடை மற்றும் கோழியினங்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. கடந்த வாரம் நாமக்கல் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல்மூச்சுக்குழல் அயற்சி, வெப்ப அயற்சி மற்றும் ஈ.கோலை நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. எனவே, கோழி வளர்க்கும் பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் கோடைக்கால பராமரிப்பு மற்றும் தீவன மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும். உயிர் எதிர்ப்பு மருந்துகளை அளிக்க வேண்டும். கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின்படி தடுப்பூசி போட்டு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது: கோழிகள் வெப்பநிலை அதிகரிக்கும் போது தீவனம் எடுக்கும் அளவு அதிகரிக்கிறது. உடல் வெப்பத்தை வெளியேற்றும் முயற்சியில், அதிக அளவு வெப்ப அயற்சிக்கு கோழிகள் உள்ளாகின்றன. இதனால் கோழிகளின் உடல் எடை குறையும். உடல் வெப்பம் அதிகரிக்க இதயத்துடிப்பும் அதிகமாகும். இறுதியில் ரத்தத்தில் வெப்பம் அதிகரித்து இறப்பு விகிதம் கூடும். கோழிகளுக்கு உச்சி வெயில் நேரத்தில் தீவனம் அளிக்க கூடாது. இரவிலும், விடியற்காலை நேரத்திலும் தீவனம் அளிக்க வேண்டும். இதனால் வெயில் குறைந்த நேரங்களில் கோழிகள் அதிகம் தீவனம் எடுக்க உதவும். கோடைக்காலத்தில் கோழிகளுக்கு வழக்கத்தை விட அதிகமான இடவசதி அளிக்க வேண்டும். அதாவது, ஒரு அறையில் வழக்கத்தை விட 20 சதவீதத்திற்கு குறைவான எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க வேண்டும். குடிநீரில் வைட்டமின் சி மருந்தினை தலா ேகாழி ஒன்றுக்கு 10 மில்லி கிராம் வீதம் கலந்துகொடுத்தால், அயற்சியை தடுக்க முடியும். மேலும், வெப்ப அயற்சியை நீக்கும் பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின், குளுக்கோஸ் உள்ளிட்டவற்றை வழங்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: