சேலம், ஏப்.23: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பல்வேறு அரசு போட்டித்தேர்வர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேலைவாய்ப்புத்துறை சார்பில் மாவட்ட ேவலைவாய்ப்பு அலுவலகங்களில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி, டிஆர்பி, சீருடைப்பணியாளர் தேர்வாணையம், எஸ்எஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வு முகமைகள் நடத்தும் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தன்னார்வ பயிலும் வாசகர் வட்டத்தின் வாயிலாக, திறன்பெற்ற பயிற்றுநர்கள் மூலம் தரமான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பாடத்திற்கும் அலகுத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும், தேர்வாணையங்கள் நடத்துவது போல் ஓஎம்ஆர் தாளில் மாநில அளவிலான தேர்வுகளையும் நடத்தி வருகின்றனர். அதேபோல், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கு மாதிரி நேர்முகத்தேர்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் போட்டித்தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள், பெண்கள், இல்லத்தரசிகள் அதிகளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு பயிற்சி பெற வருகின்றனர். இங்கு பயிற்சி பெறும் இளைஞர்கள் பல்வேறு போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசுப்பணி வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்ட ேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2,2ஏ, குரூப்-4, டிஆர்பி, காவலர், எஸ்ஐ, மருந்தாளுநர், கூட்டுறவு வங்கி உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தரமான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டித்தேர்வு புத்தகங்கள் உள்ளன. இதுதவிர்த்து புராஜக்ட் வசதியுடன் பாடம் நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்பு துறை சார்பில் மெய்நிகர் கற்றல் இணையதளத்தின் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தேவையான பாடக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வரலாறு, அரசியல், பொருளாதாரம், தமிழக அரசியல் என பல்வேறு தலைப்புகளில் மொத்தம் 1,556 மென்பாடக்குறிப்புகள், போட்டித்தேர்வு முகமைகள் நடத்திய தேர்வுகளின் வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் அன்றாட நடப்பு நிகழ்வுகள், மாத நடப்பு நிகழ்வுகள் ெதாகுத்து தேர்வர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து படித்து வருகின்றனர். இவை தேர்வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. அதேபோல், போட்டித்தேர்வர்கள் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான தேர்வர்கள் அரசு பணிவாய்ப்பை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
