காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்

சென்னை: காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பிரச்னைகள் இன்றி பகிர்ந்து கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 2018ம் ஆண்டு அமைக்கப்பட்டன. அப்போது முதல் இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதி நீர் பிரச்னைகளை தீர்த்து வருகின்றன. இந்த வகையில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் 49 முறை கூட்டப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 50வது கூட்டம் வருகிற 29ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க 4 மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23ம் தேதி முடிவடைந்துள்ளது. அதேபோன்று இப்பிரச்னையில் தொடர்புடைய புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது.வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 அன்று நடைபெற உள்ளது.

அதன் பிறகே இம்மாநிலங்களில் புது அரசுகள் பதவி ஏற்க உள்ளன.தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. காபந்து அரசுகளே பதவியில் உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் பதவி ஏற்க உள்ள நிலையில், மாநில அதிகாரிகளை வைத்து இக்கூட்டத்தை நடத்துவது பொருத்தமற்றது. எனவே, இக்கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புது அரசுகள் பதவி ஏற்றவுடன் இக்கூட்டத்தை நடத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

Related Stories: