×

மனைவிக்கு ரூ.12.6 கோடி கடன் கொடுத்ததாக வேட்புமனுவில் தகவல்; விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வேட்புமனுவில் மனைவிக்கு 12 கோடியே 60 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாக த.வெ.க. தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் 100 கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி பெரம்பூர் தொகுதி வாக்காளர் தாக்கல் செய்த வழக்கு ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேட்புமனுவில் பெருந்தொகையை மனைவி உள்ளிட்டோருக்கு கடனாக வழங்கியுள்ளதாக விஜய் தனது வேட்புமனுவில் கூறியுள்ளது குறித்து ஆய்வு செய்யக் கோரி பெரம்பூர் தொகுதி வாக்காளர் வெங்கடேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், விவாகரத்து கோரி த.வெ.க. தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா வழக்கு தாக்கல் தொடர்ந்துள்ள நிலையில், வேட்புமனுவில் அவருக்கு 12 கோடியே 60 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேட்புமனுவில் சொத்து விவரங்களை தெரிவிப்பது வெறும் சடங்கு அல்ல. அதில் உண்மை விவரங்களை மறைப்பது தேர்தல் நடைமுறையை மோசடி செய்வதை போன்றது. தனியார் கல்வி அறக்கட்டளைக்கு 20 கோடி ரூபாய் பணம் வழங்கியுள்ளது குறித்து வேட்புமனுவில் முறையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags : Vijay ,Chennai ,Madras High Court ,T.V. ,Perambur ,Trichy ,East… ,
× RELATED ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞரானார்