மே 2ம் தேதி வேலைநிறுத்தம் என தன்னிச்சையாக முடிவெடுப்பதா..? தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

சென்னை: இனிமேல் வருமான பகிர்வு அடிப்படையில் நடிகர், நடிகைகள் நடிக்க வலியுறுத்தி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், வரும் மே 2ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று, நேற்று முன்தினம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றங்களை சுமத்தி, அதையே காரணமாக முன்னிறுத்தி, வரும் மே 2ம் தேதி வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது நடிகர் சங்கத்துக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தொடர்ந்து தயாரிப்பாளர்களின் பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண நடிகர் சங்கம் உறுதுணையாக இருந்து வரும் நிலையில், தன்னிச்சையாக இந்த வேலைநிறுத்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் வெளியிட்டது வருத்தமாக இருக்கிறது. திரைத்துறை சார்ந்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவரது வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வேலைநிறுத்தம் என்ற அணுகுமுறையை எப்போதுமே நடிகர் சங்கம் ஆதரித்தது இல்லை, இனியும் ஆதரிக்காது.

நடிகர், நடிகைகள் வருமான பகிர்வு முறையில் பணியாற்றுவது தொடர்பாக தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து நடிகர் சங்கத்துக்கு கடிதமோ, மின்னஞ்சலோ அனுப்பப்படவில்லை. அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஒரு வருடத்துக்கு முன்பே நடிகர் சங்க முன்னெடுப்பு காரணமாக தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு இடையே இணக்கமான சூழலை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவோலையை அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் இறுதி செய்து தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஒப்படைத்தும் கூட, அதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து இதுநாள்வரை எந்த பதிலும் வரவில்லை. உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும், முதலீட்டையும் பாதிக்கும் தன்னிச்சையான வேலைநிறுத்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். இரு அமைப்புகளும் முன்பே பேசியபடி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் மே 4ம் தேதி வெளியான பின்பு, ஒரு தேதியில் இரு அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளும் சந்தித்து, அடுத்தடுத்த செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: