*இரு குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்த போலீசார்
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் செங்கேணி (45). இவர் மேல்மாவிலங்கை ஊராட்சி மன்ற தலைவராகவும் தமிழர்கள் முன்னேற்ற கழக தலைவராக உள்ளார்.
இந்நிலையில் இவரது 18 வயது மகள் சாதனா சக்தி கருவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த துரை என்பவரின் மகன் சிவா (எ) மோகன் (37) என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர், ஏற்கனவே 2 முறை வீட்டை விட்டு வெளியேறி மோகனுடன் சென்றதாகவும், மீண்டும் அவரே வீட்டுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று கடந்த மார்ச் 16ம் தேதி மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறி காதலன் மோகனுடன் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது தந்தை, வெளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் மார்ச் 29ம் தேதி செங்கேணி மற்றும் அவரது உறவினர்களான மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் சீனிவாசன் (36), மேல்மாவிலங்கை பகுதியை சேர்ந்த ஜெகன்நாதன் மகன் அய்யனார் (33), வெள்ளிமேடுபேட்டை புத்தனந்தல் பகுதியை சேர்ந்த காவேரி என்பவரின் மகன் வெங்கப்பன் (43) மற்றும் சிலருடன் கருவம்பாக்கம் கிராமத்துக்கு சென்று மோகனின் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி அவரது தந்தை மற்றும் தாயையும் தாக்கி வீட்டில் இருந்த பொருட்களையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மோகனின் தந்தை வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, எதிர் தரப்பினர் 4 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று அவர்கள் மீது வழக்குப்பதிந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மாயமான சிவா (எ) மோகன் (37), சாதனா சக்தி (18) ஆகியோர் திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இதையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரின் குடும்பத்தினரையும் நேரில் அழைத்து விசாரணை செய்த நிலையில் சாதனா சக்தி தனக்கு 18 வயது நிறைவடைந்ததால் அவரது பெற்றோருடன் செல்ல மறுத்து கணவருடன் செல்வதாக விருப்பம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரிடம் மனுவை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
