தமிழகத்தில் கடந்த 23ம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையாற்ற சென்னையில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர். ஓட்டுப்பதிவு முடிந்ததை தொடர்ந்து மீண்டும் நேற்று சென்னை நோக்கி படையெடுத்தனர். இதனால் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல் இன்று இயங்கும் என்பதால் தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், ஆட்டோ, வேன், கார், அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் என பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தென் மாவட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்துள்ளதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள்கோவிலில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசலால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஜி.எஸ்.டி சாலை ஸ்தம்பித்தது. இந்த போக்குவரத்து நெரிசலை தாம்பரம் மாநகர போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். கனரக வாகனங்களை சிங்கபெருமாள்கோவில் பகுதியில் இருந்து ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் மார்க்கமாக திருப்பி அனுப்பினர்.
