மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் காசிமேட்டில் மீன் வரத்து குறைந்து மீன்கள் விலை இரு மடங்கு உயர்வு: ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

சென்னை: மீன் பிடி தடைகாலம் அமலில் உள்ளதாலும், வரத்து குறைந்ததாலும் காசிமேட்டில் மீன்கள் விலை இரு மடங்கு எகிறியது. இதனால் அசைவப் பிரியர்கள் ஏராளமானோர் வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை என்றாலே கூட்டம் திருவிழாபோல காட்சி அளிக்கும். தற்போது மீன்பிடி தடைகாலத்தால் மீன் விற்பனை கூடம் வெறிச்சோடி காணப்படுகின்றன. மீன்கள் வாங்க வந்த மீன் பிரியர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.பொதுவாக, காசிமேட்டில் மீன் விற்பனை ஞாயிற்றுக்கிழமைகளில் களைகட்டும்.

ஏராளமான அசைவப் பிரியர்கள் மீன்களை வாங்க காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வருவார்கள். தங்களுக்கு வேண்டிய மீன்களை ஆர்வமுடன் வாங்கி செல்வார்கள். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, 800க்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்லவில்லை. கரைகளில் மீன் பிடிக்கும் பைபர் படகுகளில் பிடித்து வரும் மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் காசிமேட்டில் மக்கள் கூட்டம் குறைவாகவும், வியாபாரிகள் கூட்டம் அதிகமாகவும் காணப்பட்டது. ஓட்டல் வைத்திருக்கும் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து அந்த மீன்களை வாங்கிச் சென்றனர். ஆனால் பொதுமக்கள் வாங்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.ஆழ்கடலில் விசைப்படகுகளில் பிடித்து வரப்படும் பெரிய மீன்கள் விற்பனை செய்யும் மீன் கடைகள் இல்லாமல் மீன் சந்தை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. மீன்கள் வரத்து குறைவினால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

காசிமேடு பழைய மீன் விற்பனை கூடத்தில் பைபர் படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்கள் நேற்று விற்பனை செய்யப்பட்டன. அந்த வகையில் வஞ்சிரம் ரூ.1400, சங்கரா ரூ.700, பாறை ரூ.900 மற்றும் நண்டு ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டது. மீன் வரத்து குறைவு, மீன்பிடி தடைகாலம் உள்ளிட்ட காரணங்களால் மீன்கள் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: