மாநகராட்சி பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை

சென்னை: தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் 23ம் தேதி முடிந்துள்ள நிலையில், 2026-2027ம் ஆண்டுக்கான பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வீடுவீடாக சென்று மாணவர் சேர்க்கை இயக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரையில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட புதிய குழந்தைகள் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மாநகராட்சிஅதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தின் 3வது வாரம் வரையில் மாநகராட்சிப் பள்ளிகள் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர். மேலும் இந்த மாத இறுதிக்குள் சேர்க்கை எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அத்துடன் மே மாதத்துக்குள் இது 7 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையைவிட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதற்காக அந்தந்த பள்ளிகளின் முன்பாக பதாகைகள் ை வக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மாநகராட்சியில் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேனிலைப் பள்ளிகள் என 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் 2025-2026ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மாநகராட்சியின் புள்ளி விவரங்களின்படி தேனாம்பேட்டை மணடத்தில் அதிகபட்சமாக 53 பள்ளிகளும், திரு.வி.க நகரில் 50, தொண்டையார் பேட்டையில் 46, ராயபுரம் 42, இயங்கி வரும் நிலையில் ஆலந்தூர் மண்டலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 8 பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வரை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது பள்ளிகளில் 13 ஆயிரத்து 800 மாணவர்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது 2024-2025ம் கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்டதை விட(6000) இரு மடங்கு அதிகம்.

இதையடுத்து, மாணவர் சேர்க்கையை விரைவுபடுத்த, அனைத்து மண்டலங்களிலும் 45 ஆட்டோக்கள் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடுவீடாகச் சென்று மாணவர்களை சேர்க்க பிரசாரம் செய்து வருகின்றனர். சிந்தாதரிப் பேட்டையில் உள்ள ஒரு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், ‘ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று தொடக்க வகுப்புகளில் 10க்கும் மேற்பட்ட புதிய மாணவர்களை சேர்த்துள்ளனர். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

* கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வரை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது பள்ளிகளில் 13 ஆயிரத்து 800 மாணவர்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related Stories: