வெளிநாட்டு நிதியுதவி சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி ஜூன் 28ம் தேதி நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம்: திமுக எம்பி வில்சன் அறிவிப்பு

 

சென்னை: ஒன்றிய அரசு வெளிநாட்டு நிதியுதவி சட்டதிருத்த மசோதாவை திரும்பபெறக் கோரி வரும் ஜூன் 28ம் தேதி நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டு நிதியுதவி திருத்தச்சட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தலைமையில் நேற்று இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் 150க்கும் மேற்பட்ட நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், சிவில் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மை சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்தரங்களில் எம்பி வில்சன் பேசியதாவது: வெளிநாட்டு நிதியுதவி சட்டதிருத்த மசோதா ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பாதிக்கும் அபாயம் கொண்டது. மேலும், இது தன்னார்வ அமைப்புகளின் சுயாட்சி மற்றும் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக ஏழை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் குறையக்கூடும். எனவே, சட்டதிருத்த மசோதாவை திரும்பபெற கோரி வரும் ஜூன் 28ம் தேதி நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு திமுக எம்பி வில்சன் பேசினார்.

 

Related Stories: