முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் நடைப்பயிற்சி; செல்பி, புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

 

மதுரை: கொடைக்கானலில் குளுமையான காலநிலையை அனுபவித்தவாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது குடும்பத்தினருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வருடன் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கடந்த 23ம்தேதி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தற்போது தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால், சூறாவளி பயணம் மேற்கொண்ட முதல்வர், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 4 நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், குடும்பத்தினர் வந்திருந்தனர்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இந்த தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது’ என்று கேட்டதற்கு ‘’திமுகவின் வெற்றி வாய்ப்பு சூப்பராக உள்ளது’’ என்பதை கூறிடும் வகையில், கை கட்டை விரலை உயர்த்தி, தம்ஸ் அப் காட்டியவாறு, அங்கிருந்து சென்றார். இதையடுத்து மதியம் 3 மணிக்கு கொடைக்கானல் வந்த முதல்வர் மற்றும் குடும்பத்தினரை, திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பூச்செண்டு, புத்தகங்கள் வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர். பின்னர் அவர் தனியார் விடுதிக்கு சென்று தங்கினார்.

இன்று காலை, கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியை சுற்றி 10 டிகிரி செல்சியஸ் முதல் 13 டிகிரி செல்சியஸ் வரை நிலவும்குளுமையான காலநிலையை அனுபவித்து ஏரியை கண்டு ரசித்தவாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வருடன், நடைப்பயிற்சிக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் கை குலுக்கி, புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொண்டனர். அவர்களிடம் முதல்வர் நலம் விசாரித்தார்.

 

Related Stories: