டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்ட சுவிஸ் ஏர் விமானம் பெரும் விபத்து!

புதுடெல்லி: தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் புறப்படத் தயாரான விமானத்தின் இன்ஜினில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகருக்கு சுவிஸ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எல்.எக்ஸ் 147 என்ற ஏர்பஸ் ஏ330 ரக விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

இந்த விமானத்தில் 228 பயணிகள் மற்றும் 4 பச்சிளம் குழந்தைகள் என மொத்தம் 232 பேர் இருந்தனர். இன்று அதிகாலை 1.08 மணியளவில், ஓடுதளத்தில் விமானம் புறப்படத் தொடங்கியபோது, அதன் ஒரு இன்ஜினில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதை கவனித்த விமானிகள் உடனடியாக விமானத்தை நிறுத்தினர். பின்னர் அவசர கால சரிவுகள் மூலம் பயணிகள் அனைவரும் ஓடுதளத்திலேயே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த விபத்தில் வெளியேறும் போது 6 பயணிகள் காயமடைந்ததை அடுத்து, அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவசர கால சரிவுகளை பயன்படுத்த முடியாத சில பயணிகளுக்கு படிக்கட்டுகள் மூலம் உதவி வழங்கப்பட்டது. இதுகுறித்து சுவிஸ் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்ஜினில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பாதுகாப்பு கருதி பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

விமான ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகளுக்கு தேவையான மாற்று விமான ஏற்பாடுகள் மற்றும் ஓட்டல் தங்குமிட வசதிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணத்தை முழுமையாக கண்டறிய தொழில்நுட்ப வல்லுநர்கள் டெல்லி வர உள்ளனர். பயணிகளின் பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: