வேலூர், ஏப்.23: வாக்காளர் அடையாள அட்டை மற்றும் 12 வகையாக ஆவணங்கள்வாக்காளர்கள் வாக்களிக்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கீழ்க்கண்ட 12 ஆவணங்களின் மூலம் தங்களது வாக்குகளை செலுத்தலாம். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம். அதேநேரத்தில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை(பான் கார்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.
இதுதவிர பாரளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை என மேற்கண்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
