×

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு: அர்ச்சனா பட்நாயக் பேட்டி

 

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தற்போதைய 16வது சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகதின் 17வது சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; தமிழ்நாடு முழுவதும் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல்முறை வாக்காளர்கள் 14.59 லட்சம் பேர் உள்ளனர். 75,064 வாக்குச்சாவடி மையங்களில் 1,06,480 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளன. 85,875 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,262 கோடி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.543 கோடி பணம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.719 கோடி பணம், பொருட்கள் உரியவர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டன. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு செல்போனை எடுத்துச்செல்ல அனுமதியில்லை; எல்லா வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் செல்போனை வெளியே வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறிய 2,118 இணைய பக்கங்கள் முடக்கம்; 163 பதிவேற்றங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags : Tamil Nadu Assembly elections ,Archana Patnaik ,Chennai ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Tamil Nadu Assembly ,16th Legislative Assembly of Tamil ,Nadu ,Tamil Nadu’s… ,
× RELATED பிரதமர் மோடியை தீவிரவாதி என்று...