×

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இருக்கும் நிலையில் ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தம்; காலவரையறையின்றி நீட்டிப்பு: டிரம்ப் அதிரடி முடிவு

வாஷிங்டன்: ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தத்தை காலவரையறையின்றி நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக போர் பதற்றம் உச்சத்தை எட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே 14 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் காலம் இன்றுடன் (இந்திய நேரப்படி நாளை காலை 7 மணி வரை) நிறைவடைய இருந்த நிலையில், உலக நாடுகள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தன. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிடப்பட்ட போதிலும், அதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், இன்று போர் நிறுத்தத்தை காலவரையறையின்றி நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பீல்டு மார்ஷல் அசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் தரப்பில் இருந்து முறையான மற்றும் ஒருங்கிணைந்த நீண்டகால திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை இந்த போர் நிறுத்தம் தொடரும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் ஆளும் தரப்பினர் இடையே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதால், அவர்களால் ஒருமித்த முடிவை எடுக்க முடியவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டாலும், ஈரானின் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் இருக்கவும் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினர் இஸ்லாமாபாத் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘டூஸ்கா’ என்ற ஈரானிய சரக்கு கப்பலை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மறுத்ததால் இந்த இழுபறி நீடிக்கிறது.

அமெரிக்காவின் இந்த போர் நிறுத்த நீட்டிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாப்பின் ஆலோசகர், ‘திடீர் தாக்குதல் நடத்துவதற்கு அவகாசம் தேடுவதற்காக, இந்த பேச்சுவார்த்தைக்கான ஏற்பாட்டை அமெரிக்கா செய்து வந்தது. இது அவர்களின் தந்திரமே தவிர வேறொன்றும் இல்லை’ என்று கூறியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் சர்வதேச எரிசக்தி சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags : Iran ,US ,Strait of Hormuz ,Trump ,Washington ,President ,United ,States ,
× RELATED 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி...