×

தமிழக சட்டபேரவை தேர்தலையொட்டி புதுச்சேரியில் 443 மதுக்கடைகளுக்கு சீல்: சரக்கை பதுக்கி விற்ற 7 பேர் சிக்கினர்

புதுச்சேரி: தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியிலும் 3 நாட்கள் (ஏப்.21 முதல் 23 வரை) மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. நேற்று காலை 10 மணி முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதின.

குடிமகன்கள் அதிகளவில் மதுபானங்களை வாங்கி சென்ற நிலையில், கடத்தலை தடுக்கும் வகையில் மாநில எல்லைகளான கோரிமேடு, கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு, கன்னியகோயில் உள்ளிட்ட பகுதிகளில் பறக்கும் படைகள் விடியவிடிய சோதனையில் இறங்கின. இதையடுத்து, இந்த கடைகளை திறக்காமல் இருக்கும் வகையில், காலை 10 மணியிலிருந்து மதுக்கடைகளை கண்காணித்த கலால்துறை தாசில்தார் ராஜேஷ் கண்ணா தலைமையிலான 15 குழுக்களை கொண்ட அதிகாரிகள், புதுச்சேரியிலுள்ள 443 மதுபான கடைகள், 37 மதுபான குடோன்கள் மற்றும் 83 சாராய கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இதேபோல் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள மதுபான, சாராய கடைகளும் சீல் வைக்கப்பட்டது.

இருப்பினும் தடை உத்தரவை மீறி புதுச்சேரியில் ஆங்காங்கே மதுபானங்களை கள்ளத்தனமாக விற்ற 7 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து மதுபாட்டில்கள், சாராயம், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் புதுச்சேரி, காரைக்கால் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மதுபான, சாராய கடைகளை கலால்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Tags : Puducherry ,Tamil Nadu Assembly elections ,Tamil Nadu Assembly general elections ,Election Commission ,Tamil Nadu ,
× RELATED பிரதமர் மோடியை தீவிரவாதி என்று...