செங்கல்பட்டு: சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் உள்ள புறநகர் பகுதிகளில் குறிப்பாக, ஜிஎஸ்டி நெடுஞ்சாலை உள்பட பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் நகரின் உட்புற சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் இளநீரின் விலையைக் கேட்டாலே தலைச்சுற்றல் ஏற்படுகிறது.ஏனெனில், ஏற்கெனவே 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய இளநீர் தற்போது 80 ரூபாய்க்கும், பெரிய அளவிலான இளநீர் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடி அருகே நடைபாதையில் இளநீர் கடை நடத்திவரும் வியாபாரிகள் கூறுகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நாட்டு இளநீர் காய்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. மேலும், தென்னை மரங்களில் ஏறி காய்களை பறிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டதால், உள்ளூர் இளநீரை சந்தைப்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது உள்ளூர் இளநீர் வரத்து இல்லாததால், பொள்ளாச்சியில் இருந்து லாரிகள் மூலம் பெரிய அளவிலான இளநீர் காய்கள் கொண்டு வரப்படுகின்றன. இதில் நீண்டதூர போக்குவரத்து செலவு மற்றும் கூடுதல் கூலி காரணமாக, பொள்ளாச்சியில் இருந்து இளநீர் காய்கள் கூடுதல் விலைக்கு விற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி, வெயிலின் உக்கிரத்தில் தாகத்தை தணிக்க கூடுதல் விலை கொடுத்து மக்கள் இளநீர் வாங்கி அருந்தவேண்யடி சூழலால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
